Published : 31 May 2025 06:34 AM
Last Updated : 31 May 2025 06:34 AM
சென்னை: நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை ஊக்குவிக்க இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) திட்டமிட்டுள்ளது என அவ்வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இயற்கை விவசாயத்தை ஊக்கப்படுத்தும் நோக்கில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பால் பொருட்கள் கூட்டுறவு நிறுவனமான அமுல் மற்றும் ரிச்பிளஸ் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா முன்னிலையில், பொது மேலாளர் விஜயா, அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் வியாஸ் மற்றும் ரிச்பிளஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அசோக் சாரங்கன் ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஐஓபி மேலாண்மை இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி அஜய்குமார் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நடப்பாண்டில் ஒரு லட்சம் இயற்கை விவசாயிகளை இணைத்து ஊக்கமளிக்க திட்டமிட்டுள்ளது. விவசாயிகளுக்கு கடன் வசதி, இயற்கை விதைகள், பயிற்சி, சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு இந்த ஒப்பந்தம் உதவுகின்றது.
இந்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், ஐஓபி-யில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இயற்கை வேளாண் அட்டை வழங்கப்படும். இந்த சிறப்பு அட்டை விவசாயிகளுக்கு அமுல் நிறுவனத்தின் சான்றளிக்கப்பட்ட விற்பனை நிலையங்கள் மூலம் மானிய விலையில் இயற்கை விதைகளை வாங்க உதவுகிறது. வேளாண் விஞ்ஞானிகளின் உதவிகள், பயிற்சி வாய்ப்புகளை இலவசமாக பெறுதல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது.
அத்துடன், நிலையான வளர்ச்சிக்கான விரிவான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குகிறது. `வளர்ச்சியடைந்த இந்தியா' என்ற இலக்கை அடைவதற்கு இயற்கை விவசாயம் மிக முக்கியமானது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT