Published : 23 May 2025 06:16 AM
Last Updated : 23 May 2025 06:16 AM

ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு: தமிழகத்தில் 798 இனங்களை சேர்ந்த 7.84 லட்சம் பறவைகள்

சென்னை: தமிழக வனத்துறை சார்பில் ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 798 இனங்களை சேர்ந்த 7.84 லட்சம் பறவைகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக வனத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பறவைகள், சுற்றுச்சூழலின் ஆரோக்கியத்தை கடைபிடிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் உயிரினமாகும். எனவே, பறவை இனப்பன்மையை பாதுகாக்கவும், அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கவும், தமிழக அரசு மாநிலம் முழுவதும் 2000-க்கும் மேற்பட்ட இடங்களில் (ஈர நிலங்கள் மற்றும் நிலப்பகுதிகள்) மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பை 2023-ம் ஆண்டு முதல் தொடர்ந்து நடத்தி வருகிறது.

தமிழகத்தில் பறவைகளை கண்காணிப்பதன் நோக்கம், பறவைகளின் இருப்பை பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல், அவற்றின் வாழ்விடங்கள் தொடர்பான அச்சுறுத்தல் காரணிகள் உள்ளிட்ட பிற முக்கிய சூழல் அம்சங்களையும் பதிவு செய்து, பறவைகளின் வாழ்விடப் பாதுகாப்புக்கான சிறந்த நீண்டகாலத் திட்டங்கள் வடிவமைக்க உதவுகிறது. இவை பறவை இனங்களின் செயல்பாடுகள், பரவல் மற்றும் செறிவு பற்றிய உள்நோக்கை வழங்கி பறவைகள் பாதுகாப்பு முயற்சிகளுக்கு உதவுகிறது.

தமிழகத்தில் இடம்பெயரும் பறவைகள் பருவம், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபரில் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை தொடர்கிறது. பறவைகள் சரணாலயம் மற்றும் பாதுகாப்பு சரணாலயங்களில் உள்ள பறவைகளை கண்காணிப்பது ஒரு தொடர்ச்சியான பயிற்சியாக இருந்தாலும், பறவைகளின் பல்வேறு வாழ்விடங்களில் மாநில அளவிலான கண்காணிப்பு பயிற்சியும் ஒவ்வொரு ஆண்டும் வனத்துறையால் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பு 2 கட்டங்களாக நடத்தப்பட்டன. முதல்கட்டமாக கடந்த மார்ச் 8, 9 தேதிகளில் ஈர நிலப் பறவைகள் (உள்நாட்டு மற்றும் கடலோர ஈர நிலங்கள்) கணக்கெடுக்கப்பட்டது. 2-ம் கட்டமாக நிலப்பகுதி பறவைகள் மார்ச் 15, 16 தேதிகளில் கணக்கெடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு பறவைகள் கணக்கெடுப்பு, அழிந்து வரும் பறவைகள் மற்றும் இரவு நேர பறவைகளை ஆவணப்படுத்துவதற்கு சிறப்பு முக்கியத்துவம் அளித்தது. இந்த கணக்கெடுப்பில், தமிழகத்தில் அழிந்து வரும் 37 பறவை இனங்களில், 26 இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 934 இடங்களில் ஈர நிலப் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 397 பறவை இனங்களைச் சேர்ந்த 5,52,349 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இவற்றில், 1,13,606 பறவைகள் இடம்பெயரும் பறவைகள் மற்றும் 49 சதவீத பறவைகள் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்தவை. சின்னக்கொக்கு அல்லது கள்ளவாயன், சிறிய நீர்க்காகம், நத்தைகுத்தி நாரை, கருந்தலை, கரண்டிவாயன் உள்ளிட்டவை புலம்பெயர்ந்த பறவைகளில் மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன.

மேலும், 1093 இடங்களில் நிலப்பரப்பு பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, 401 பறவை இனங்களைச் சேர்ந்த 2,32,519 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில், 1,13,606 பறவைகள் புலம்பெயர்ந்த பறவைகளாக இருந்தன. வீட்டுக்காக்கை, நாகணவாய், பச்சைக்கிளி, சின்னான், தவிட்டு குருவி உள்ளிட்டவை மிகவும் பொதுவான பறவைகளாக காணப்பட்டன. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x