Published : 28 Mar 2025 04:53 PM
Last Updated : 28 Mar 2025 04:53 PM
காஞ்சிபுரம்: திருக்காலிமேடு அருகே அல்லப்புத்தூர் ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து கூட்டம், கூட்டமாக சுற்றித் திரியும் நிலையில், கோடை காலம் தொடங்கியதால் ஏரி வறண்டுள்ளது. இதனால் குடிநீரை தேடி ஊருக்குள் புகும் மான்களுக்கு, தெருநாய்களால் ஆபத்து ஏற்படும். எனவே, ஏரியில் செயற்கை குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும் என வன விலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியின் 22-வது வார்டு திருக்காலிமேடு அருகே அமைந்துள்ள அல்லப்புத்தூர் ஏரி பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நத்தப்பேட்டை ஏரி மற்றும் மஞ்சள் நீர் கால்வாயின் உபரிநீர், அல்லப்புத்தூர் ஏரியில் செல்லும் நிலை இருந்தது. ஏரியின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பு, கழிவுநீர் கால்வாயாக மாறியதால் ஏரிக்கு நீர்வரத்து இல்லை. ஆனால், மழைக் காலங்களில் மட்டும் ஏரியில் ஆங்காங்கே சிறிதளவு தண்ணீர் மட்டுமே தேங்கி நிற்கும் நிலை உள்ளது. மேலும், ஏரியில் கருவேல மரங்கள் உட்பட ஏராளமான மரங்கள் வளர்ந்து காடுபோல் அடர்ந்து காணப்படுகின்றன.
இந்நிலையில், அல்லப்புத்தூர் ஏரியில் கடந்த 2016-ம் ஆண்டு இரண்டு புள்ளி மான்கள் திரிவதை அறிந்த வனத்துறையினர், ஏரியில் தங்கியுள்ள மான்கள் மற்றும் பறவைகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கும் வகையில், ஏரிக்கரைகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர். தற்போது, ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து குட்டிகளுடன் கூட்டம், கூட்டமாக சுற்றித் திரிகின்றன.
அதனால், மான்களுக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கவும், மயில் மற்றும் மான்கள் நல்ல சூழலில் வசிக்கும் வகையில் இயற்கை சூழலை பாதுகாக்க எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். மேலும் மரக்கன்றுகளை நடுவதற்கும் பொதுப் பணித்துறை மற்றும் வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கோடைகாலம் தொடங்கியுள்ளதால் கடும் வெப்பம் காரணமாக ஏரியில் குட்டையாக தேங்கி நின்று தண்ணீரும் வறண்டு காணப்படுகிறது. இதனால், குடிநீருக்காக நீர்நிலைகளை தேடி மான்கள் கூட்டம் ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து, சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: அல்லப்புத்தூர் ஏரியில் மான்கள் இனப்பெருக்கம் செய்து கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிவது மிகுந்த மகிழ்ச்சியை தந்தாலும், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் கொட்டப்பட்டு வருகின்றன. மேலும், கரைப்பகுதிகளில் வன விலங்குகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலான செயல்கள் அதிகம் நடைபெறுகிறது.
அதனால், சுற்றுப்புற பொதுமக்களிடம் வனவிலங்குகளின் வாழ்விடம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி, மான்களின் ஓவியம் அடங்கிய அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். இதுதவிர, ஏரியில் மயில்களையும் பாதுகாக்க வேண்டும். மான்களை பாதுகாக்கும் வகையில் ஏரியில் செயற்கை தொட்டி மூலம் குடிநீர் வழங்க வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட வனத்துறை அலுவலர் ரவிமீனா கூறியதாவது: அல்லப்புத்தூர் ஏரியில் மான்களுக்கு இடையூறு மற்றும் பாதிப்பு ஏற்படாத வகையில், ஏரிக்கரைகளில் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். கரை பகுதிகளில் விழிப்புணர்வு மற்றும் மான்கள் வசிக்கும் பகுதி என பலகை அமைக்கவும், குடிநீர் தொட்டி அமைப்பது தொடர்பாகவும் ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT