Published : 17 Mar 2025 04:59 PM
Last Updated : 17 Mar 2025 04:59 PM
மேட்டூர்: மேட்டூர் வனப்பகுதியில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகை பறவையினங்களை வனத்துறையினர் கண்டறிந்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர் வனக்கோட்டத்தில், ஈரநிலப்பரப்பு, நிலப்பரப்பில் வாழும் பறவைகள் கணக்கெடுப்புப் பணி கடந்த 8, 9, 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடந்தது.
இதன் ஒரு பகுதியாக சேலம் வனக்கோட்டத்துக்குட்பட்ட மேட்டூர் வனச்சரகத்தில் பாலமலை, நீதிபுரம், வனவாசி, சோளப்பாடி, பண்ணவாடி, செம்மலை ஏரி ஆகிய இடங்களில் கணக்கெடுப்பு நடந்தது. இப்பணி முடிந்த நிலையில் பறவையினங்கள் பட்டியலை வனத்துறையினர் தயாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: மேட்டூர் வனப்பகுதியில் 4 நாட்கள் நடந்த கணக்கெடுப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட பறவையினங்களும், 2,300-க்கும் மேற்பட்ட பறவைகள் இருப்பதும் கண்டறிப்பட்டுள்ளது. இதில் ஈரநிலப்பரப்பு பகுதியில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பறவையினங்கள், 1,800-க்கும் மேற்பட்ட பறவைகள் உள்ளன. இப்பகுதியில் 34 வெளிநாட்டு பறவையினங்களும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இப்பணியில் கே.ஆர்.தோப்பூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் பங்கேற்று அரிய வகை பறவையினங்களான சைபீரியன் ஸ்டோன்சாட், மேற்கத்திய மஞ்சள் வாலாட்டி, புள்ளி செங்கால் உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் இருவாச்சி, வெண்பிடரி பட்டாணி குருவி உள்ளிட்ட பல்வேறு பறவையினங்களை பதிவு செய்தார், என்றனர்.
இதுகுறித்து பறவைகள் ஆர்வலரும், அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான செந்தில்குமார் கூறியதாவது: சேலம் மாவட்டத்தில் காணப்படும் வெளிநாட்டு பறவைகள் பெரும்பாலும் ஐரோப்பாவைச் சேர்ந்தது தான். காலநிலை, சுற்றுச்சூழல் மற்றும் உணவு தேடி தான் பறவையினங்கள் வந்து செல்கின்றன. அந்த வகையில் சைபீரியன் ஸ்டோன்சாட் பறவை ஐரோப்பாவில் இருந்து மிதவெப்ப மண்டலம் நிலவும் பகுதிக்கு வருவது வழக்கம்.
குறிப்பாக, கடலோர பகுதி மற்றும் பெரிய அளவிலான நீர் நிலை பகுதிகளில் மட்டுமே பார்க்க முடியும். அதேபோல், புள்ளி செங்கால் உள்ளான் பறவையும் கடல் மற்றும் நீர் நிலைப்பகுதிகளில் பார்க்க முடியும். ஊசிவால் வாத்து நீர்வாழ் பறவையாகும். இந்த பறவை கரையோரத்திலும், நீரின் நடுவில் மட்டுமே வாழும். இந்த பறவையும் ஐரோப்பாவில் இருந்து தான் வந்துள்ளது. மேற்கத்திய மஞ்சள் வாலாட்டி பறவையும் ஐரோப்பாவைச் சேர்ந்தது.
வெண்பிடரி பட்டாணி குருவி வட இந்தியாவில் மட்டுமே அதிகளவில் காணப்படும் நிலையில், தென்னிந்தியாவில் கர்நாடகா, தமிழகத்தில் மட்டுமே காணமுடியும். குறிப்பாக, கர்நாடக - தமிழக எல்லையான மேட்டூர் வனச்சரகத்தில் பார்க்க முடியும். அதேபோல், மேட்டூர் வனச்சரகத்தை ஒட்டியுள்ள ஈரோடு, தருமபுரி மாவட்டங்களிலும் பார்க்க முடியும். மேலும் குஜராத் மாநிலத்தில் அதிகளவில் பார்க்க முடியும், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT