Published : 13 Feb 2025 06:55 PM
Last Updated : 13 Feb 2025 06:55 PM
சென்னை: சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கையாக காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் 1,000 பேருக்கு மஞ்சப்பை இன்று வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில், ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுகாதாரக்கேடுகள் மற்றும் குப்பைகளை வகைப்பிரித்தல் குறித்த விழிப்புணர்வு முகாம், காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இம்முகாமில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பங்கேற்று, மாணவ மாணவிகளுக்கு ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் மக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதற்கு மாற்றாக பயன்படுத்த வேண்டிய பொருட்கள் குறித்தும் விளக்கினார்.
தொடர்ந்து, வீடுகளில் உருவாகும் குப்பைகளை மக்கும், மக்காத குப்பைகள் என்று வகைப்பிரித்து அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அது தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களும் ஒளிபரப்பப்பட்டன. பின்னர், மாணவ மாணவிகள் அனைவருக்கும் டெமினாஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் உதவியுடன் 1000 மஞ்சப்பைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், டெமினாஸ் இந்தியா நிறுவன துணைத் தலைவர் (சிஎஸ்ஆர்) கிடியன் கிறிஸ்துதாஸ், உத்கர்ஷ் குளோபல் பவுண்டேசன் நிறுவனத்தை சேர்ந்த எஸ்.வசந்தராஜ், கல்லூரி நூலக பேராசிரியை கே.சந்திரா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT