Published : 09 Feb 2025 03:07 AM
Last Updated : 09 Feb 2025 03:07 AM
சென்னை: தமிழகத்தில் ஆங்காங்கே பனிமூட்டம் இருந்தாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலேயே அதிகபட்சமாக 35 டிகிரி வெப்பமும், குறைந்தபட்சமாக 15 டிகிரி குளிரும், கரூர் பரமத்தியில் ஒரே நாளில் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்த நிலையில், வட தமிழகத்தில் ஆங்காங்கே காலை வேளையில் லேசான பனிமூட்டம் நிலவினாலும், பகல் நேரத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த சில நாட்களின் வானிலை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 14-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். காலையில் பொதுவாக பனிமூட்டம் காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலையில் பனிமூட்டம் நிலவும். வெப்பநிலை 23 டிகிரி முதல் 33 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.
கரூர் பரமத்தியில் நேற்று முன்தினம் ஒரே நாளில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பமும், நள்ளிரவில் மிக குறைந்தபட்சமாக 15 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகியுள்ளது. ஈரோட்டிலும் அதிகபட்சமாக 35 டிகிரி பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT