Published : 01 May 2024 04:12 AM
Last Updated : 01 May 2024 04:12 AM

அதிகரித்து வரும் வெயிலின் தாக்கம் - மரக்கன்றுகள் நடுவது மாபெரும் இயக்கம் ஆகுமா?

இடையகோட்டையில் அமைக்கப்பட்டுள்ள 6 லட்சம் மரக்கன்றுகளை கொண்ட மியாவாக்கி குறுங்காடு. (வலது) ஒட்டன்சத்திரம் பகுதியில் நடவு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நர்சரியில் வளர்ந்துள்ள மரக்கன்றுகள்.

திண்டுக்கல்: தமிழகம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை மாபெரும் இயக் கமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெ டுத்தால், வரும் ஆண்டுகளில் வெயிலின் தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்க ஏதுவாக இருக்கும்.

தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக உள்ளது. காலநிலை மாற்றத்தால் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது என்ற போதும், இதைத் தவிர்க்க நம்மால் இயன்ற முயற்சியை அனைவரும் முன்னெடுக்க வேண்டியது அவசியம். ஆங்காங்கே தன்னார்வலர்கள் சிலர் அமைப்பாகவும், சிலர் தனியாகவும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். சிறிது சிறிதாக செய்யப்படும் மரக்கன்று நடும் செயலை, தமிழகம் முழுவதும் மாபெரும் இயக்கமாக மாற்ற தமிழக முதல்வரால் மட்டுமே முடியும்.

கோடை காலம் முடிந்தவுடன் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே மரக்கன்றுகள் நடும் இயக்கத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்க முன்வர வேண்டும். தமிழகத்தில் 33 சதவீதமாக காடுகள் பரப்பை உயர்த்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இருந்தபோதிலும் அதில் போதிய வேகம் காட்டப்படவில்லை என்கின்றனர் இயற்கை ஆர்வலர்கள்.

சுற்றுச்சூழலைப் பாது காக்கவும், காலநிலை மாற்றத்தைத் தவிர்க்கவும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் 'மியாவாக்கி' என்பவர் அறிமுகப் படுத்தியதுதான் குறுங்காடுகள் திட்டம். சுற்றுச்சூழலை காக்க உலகின் பல நாடுகள் மியாவாக்கியின் அறிவுரை களை ஏற்று, தாங்களாவே முன்வந்து குறுங்காடுகளை அமைத்து வருகின்றன. இந்த நடைமுறை நமது நாட்டிலும் பின்பற்றப்படுகிறது. குறுகிய இடத்தில் பல்வேறு வகையான மரக் கன்றுகளை நடுவதன் மூலம் குறுங்காடுகள் உருவாக்கப் படுகின்றன. இந்தத் திட்டத்தை அதிக பரப்பில் செயல்படுத்திய மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது.

இடையகோட்டை பசுமை குறுங்காடு: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை கிராமத்தில் கருவேல மரங்களுடன் புதர் மண்டிக் கிடந்த 117 ஏக்கர் பரப்பு சீரமைக்கப்பட்டு, அமைச்சர் அர.சக்கர பாணி முயற்சியால் 2002 டிசம்பர் 23-ம் தேதி 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் உதயநிதி பங்கேற்றார்.

ஓராண்டுக்கு மேல் ஆன நிலையில் இந்த குறுங்காட்டில் மரக்கன்றுகள் அனைத்தும் தழைத்தோங்கி வளர்ந்து நிற்கின்றன. தமிழகத்திலேயே பெரிய பரப்பிலான குறுங்காடு இங்குதான் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், மாவட்ட வாரியாக மியாவாக்கி குறுங்காடுகளை அமைத்தால் அரசின் இலக்கான 33 சதவீத வனப் பரப்பை எளிதில் எட்டலாம். கால நிலை மாற்றத்தையும் தடுக்க முடியும்.

இது போன்று ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதியிலும் மக்கள் பிரதிநிதிகள் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஒரு இயக்கமாகவே முன்னெடுக்க வேண்டும். இதை ஒருங்கிணைத்து மாவட்டவாரியாக மியாவாக்கி குறுங்காடுகள் உருவாக்குவது, சாலை ஓரம் மரங் கன்றுகள் நடுவது என மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஒரு மாபெரும் இயக் கமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் விரும்புகின்றனர். இதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கு ஈடு கொடுத்து, வரும் ஆண்டுகளில் வெயிலின் தாக்கத்தில் இருந்து தமிழக மக்களை காக்கலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x