Published : 16 Nov 2025 12:33 AM
Last Updated : 16 Nov 2025 12:33 AM
சென்னை: ஆசிரியர் பணித் தகுதிக்கான டெட் தேர்வு நேற்று தொடங்கியது. முதல் தாள் தேர்வில் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்றனர். தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கூறியுள்ளனர். 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து விதமான பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்
தேர்வில் (டெட்) கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. எனினும், கடந்த 2 ஆண்டுகளாக டெட் தேர்வு நடத்தப்படவில்லை.
இந்நிலையில், 2025-ம் ஆண்டு டெட் தேர்வுக்கான அறிவிப்பாணையை டிஆர்பி கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி வெளியிட்டது. இதையடுத்து, இணைய
வழியில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்தச் சூழலில், பணியில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் டெட் தேர்ச்சி கட்டாயம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த செப்.1-ம் தேதி உத்தரவிட்டது. இதன்காரணமாக, டெட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
அதன்படி, டெட் முதல் தாள் தேர்வுக்கு, 1.07 லட்சம் பேர், 2-ம் தாள் தேர்வுக்கு 3.73 லட்சம் பேர் என மொத்தம் 4.80 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். இதில், தகுதியானவர்களுக்கு ஹால் டிக்கெட் நவ.3-ம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான டெட் தேர்வு நேற்று தொடங்கியது. தமிழகம் முழுவதும் 387 மையங்களில் முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. முதல் தாள் தேர்வு எழுத 1.07 லட்சம் பேர் விண்ணப்பித்த நிலையில், அதில் 92,412 (86.07%) பேர் தேர்வு எழுதினர். 14,958 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் பலத்த சோதனைகளுக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தேர்வர்கள், ‘‘கணிதம், தமிழ் ஆகிய வினாக்கள், பள்ளிப்பாடப் புத்தகங்களில் இருந்து அதிகம் கேட்கப்பட்டன. உளவியல் கல்வி சார்ந்த வினாக்கள் மட்டும் கடினமாக இருந்தன. பொதுவாக, தேர்வு சற்று எளிதாக இருந்தது’’ என்று தெரிவித்தனர். ‘தெற்காசியாவின் சாக்ரடீஸ் என்று அழைக்கப்பட்டவர் யார்’, ‘தமிழ்நாடு எனும் சொல், முதலில் ஆளப்படும் இலக்கியம் எது’, ‘இந்தியாவின் பறவை மனிதர் என்று அழைக்கப்பட்டவர் யார்’ என்பது போன்ற வினாக்கள் கேட்கப்பட்டன.
தமிழகம் முழுவதும் 1,241 மையங்களில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான டெட் 2-ம் தாள் தேர்வு இன்று காலை நடைபெறுகிறது. இதில் 3.73 லட்சம் பட்டதாரிகள் பங்கேற்க உள்ளனர். இந்த இரு தேர்வுகளின் முடிவுகளை துரிதமாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT