Published : 12 Nov 2025 03:57 PM
Last Updated : 12 Nov 2025 03:57 PM
வணக்கம், என் பெயர் ஷாலினி. நான் மதுரை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். எனக்கு அம்மா, அப்பா இருவரும் இல்லை - இருவரும் கடந்த ஆறு மாதங்களாக இல்லை. அம்மா புற்றுநோயால், அப்பா பக்கவாதத்தால் உயிரிழந்தார்கள். அந்த இழப்பை தாங்கிக்கொள்ள முடியாத நிலைமையில் இருந்தபோதும், நான் என் கல்வியை நிறுத்தவில்லை.
எங்கள் கல்லூரியில் “Digital Construction” எனும் திறன் பயிற்சியை ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் பெற்றது எனக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இருந்தது. பெற்றோர்கள் இல்லாமல் வாழும் எனக்கு இந்த பயிற்சி ஒரு நம்பிக்கையாக மாறியது. இந்த திட்டம் எனக்கு தொழில் உலகில் நுழைய தேவையான திறன்களை வழங்கியது. இன்று நான் நம்பிக்கையுடன் சொல்ல முடிகிறது - கல்லூரி முடித்தவுடன் எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் என்பதில் எனக்கு உறுதி உள்ளது.
என் பெற்றோரின் கனவு நான் நன்றாகப் படித்து, ஒரு நல்ல வேலையில் அமர்வது. அந்த கனவை நனவாக்க ‘நான் முதல்வன்’ திட்டம் எனக்கு துணையாக உள்ளது. இந்த திட்டம் இல்லையெனில், எனக்கு அந்த திறன் பயிற்சிக்கான கட்டணத்தை செலுத்த முடியாது. ஆனால் இன்று, அது கட்டணமில்லாமல் கிடைத்ததால் என் வாழ்க்கை பாதை முழுவதும் மாறிவிட்டது.
என்னைப் போல பெற்றோரை இழந்து வாடும் பல இளைஞர்களுக்கு ‘நான் முதல்வன்’ திட்டம் ஒரு ஒளிக்கதிராக இருக்கிறது. இது நம்மை வெற்றியடைந்த நபர்களாக உருவாக்குகிறது. எதிர்காலத்தில் நானும் ஒரு நல்ல நிலை அடைந்து, என்னைப்போல் துயரத்தில் வாழும் மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஆதரவாக இருப்பேன். இந்த வாய்ப்பை வழங்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘நான் முதல்வன்’ - எங்களை போன்ற இளைஞர்களின் கனவுகளுக்கு திசை காட்டும் ஒளிவிளக்கு.
வெற்றி நிச்சயம் திட்டம்: என் பெயர் சூர்யா. நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன். நாங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள வாழ்குடை என்ற சிறிய கிராமத்தில் வசித்து வருகிறோம். முன்பு நான் ஒரு சிறிய நிறுவனத்தில் மாதம் ரூ.10,000 சம்பளத்தில் வேலை செய்துவந்தேன். ஆனால், குடும்ப வறுமை காரணமாக ஒரு நல்ல வாய்ப்பு தேவைப்பட்டது.
அந்த நேரத்தில், எனக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC) வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் கிடைத்த 30 நாட்கள் ஃபோர்க்லிஃப்ட் பயிற்சி ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. நான் TVS SCS Training Academyயில் இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டு, ஃபோர்க்லிஃப்ட் இயக்கம் மற்றும் தொழில்துறை தொடர்பான பல புதிய திறன்களை கற்றுக்கொண்டேன்.
பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு, நான் ஒரு சிறந்த நிறுவனத்தில் வேலை பெற்றேன். இப்போது என் மாத வருமானம் ரூ.20,000 ஆக உயர்ந்துள்ளது – இது முன்பு பெற்ற சம்பளத்தின் இரட்டிப்பு. இந்த பயிற்சி என் வாழ்க்கையை மாற்றி, என் குடும்பத்திற்கும் உறுதியான ஆதரவாக அமைந்துள்ளது. எனது வளர்ச்சிக்கான பாதையை காட்டிய வெற்றி நிச்சயம் திட்டம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் TVS Supply Chain Solutions நிறுவனத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT