Published : 11 Nov 2025 11:20 AM
Last Updated : 11 Nov 2025 11:20 AM
கல்வி கருவறையிலிருந்தே தொடங்கிவிடுகிறது. கல்லறைவரை அது நீள்கிறது. கருவிலிருக்கும்போது தாயின் இதயத்துடிப்பே இசைத்தட்டாகிறது. இருளையே கரு இருப்பிடமாக்கிக்கொள்கிறது. பிறக்கும்போது உறுத்தும் வெளிச்சத்திற்குப் பழகுவதில் வாழ்க்கை தொடங்குகிறது. உண்பதற்கும் தவழ்வதற்கும் கற்றுக்கொள்வதால் தாக்குப்பிடிக்கும் கலை குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. வாழ்வு குறித்த பாடத்தை நாம் பிறப்பிலிருந்தே பெறத் தொடங்குகிறோம். தவழ்ந்த பின்பு மெதுவாக எழுந்து இரண்டு கால்களில் நிற்பது நமக்குள் நடக்கும் பரிணாம வளர்ச்சியாக இருக்கிறது.
தொடர்ந்து கற்றல்: கற்றதாலும் கற்றதை ஆவணப்படுத்தியதாலும் மனிதன் மற்ற விலங்குகளிலிருந்து வேறுபட்டான். அவனுடைய இடைவிடாத கல்வியே முன்னேற்றங் களை எல்லாம் முடுக்கிவிட்டது. தன்னை விட வலிமையானவற்றை எல்லாம் வெற்றிகொண்டு வீறுநடைபோடக் கல்வியே அவனுக்குக் கைகொடுத்தது.
கல்வி வசதிகளை மட்டும் அளிப்ப தில்லை, அது நம்பிக்கையையும் தருகிறது. கற்றவர் எந்த இடத்திலும் துணிச்சலாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும் திறனைப் பெறுகிறார். கற்பதை நிறுத்தாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் மனிதனே உலகில் ஒப்பற்றவனாக ஒப்புக்கொள்ளப்படுகிறான்.
கல்வி என்பது இன்று கற்பதோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. புதுப்பித்துக்கொண்டே இருப்பதுதான் கல்வி. நின்ற இடத்தில் நிற்பதற்கே ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நாளுக்கு நாள் புதிய செய்திகள் புறப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.அறிவியலும் தொழில்நுட்பமும் அசுர வேகத்தில் வளர்கின்றன. கொஞ்சம் அசட்டையாக இருந்துவிட்டால் காலம் நம்மை முந்திச்சென்று விடுகின்ற அபாயம் இருக்கிறது.
எல்லாத் துறைகளிலும் அன்றாடம் நிகழும் மாற்றங்களை நாம் அறிந்து கொண்டே இருந்தால்தான் தாக்குப்பிடிக்க முடியும். டார்வின் கூறியதைப் போல ‘தக்கவையே தாக்குப்பிடிக்கும்‘ என்கிற கோட்பாடு பணிகளுக்கும் பொருந்துவதாக இருக்கிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னால் படித்த மருத்துவத்திற்கும், இன்று நிகழ்த்தும் சிகிச்சைக்கும் நிறைய வேறுபாடு உண்டு. கணினி, கட்டுமானம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிர் வேதியியல், வேளாண்மை போன்ற பல துறைகளில் ஏகப்பட்ட மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
தொழில்நுட்பத்தின் காரணமாகச் செயற்கை நுண்ணறிவு பலருக்கும் வேலைவாய்ப்பைப் பறித்து விடும் என்கிற அச்சுறுத்தலும் இருக்கிறது. அறிவியல் தொடர்பான பொருண்மை களில் மட்டுமல்ல, சரித்திரம், தொல் லியல், சுற்றுச்சூழலியல், மானுடவியல் போன்ற வற்றிலும் தொடர்கல்வி தேவைப்படு கிறது. இலக்கியத்தில்கூட நவீன இலக் கியங்கள், புதிய இலக்கிய உத்திகள் போன்றவற்றில் பரிச்சயம் இருக்க வேண்டும்.

அறிவுச்செறிவு: கல்வி என்பது பள்ளிக் கட்டிடங்க ளோடும் கல்லூரி மதில்சுவர்களோடும் முடிந்துவிடுகிற ஒன்றல்ல. அவை நம்மை மேலும் கற்பதற்கான மனத்தயாரிப்பு செய்கிற பயிற்சிகள் மட்டுமே. நாம் படித்த வற்றைப் பரிசோதித்துப் பார்ப்பதற்கும் அவை எவ்வளவு தூரம் சரி என்று தெரிந்துகொள்வதற்கும் வாழ்க்கையை முழுவீச்சில் நாம் எதிர்கொள்ள வேண்டும்.
அப்படி நாம் உண்மையான சவால்களைச் சந்திப்பதற்கு ஓரளவிற்குத் துணிச்சலையும் திராணியையும் நமக்கு வழங்குவதற்குத்தான் முறையான கல்வி பயன்படுகிறது. நாம் நிராயுதபாணியாக நிற்கவில்லை என்பது மிகப் பெரிய ஆறுதல். நம் எண்ணங்களை மொழிக்குச் சரியாகக் கடத்துகிறோமா என்கிற தகவல் பரிமாற்றக் கட்டளைக்கல்லை நம் படிப்பு உரசிப்பார்த்து உறுதிசெய்கிறது. அது நம் கேள்விகளையும் ஐயப்பாடுகளையும் தெளிவாக முன்வைத்து மேன்மேலும் கற்றுக்கொள்ள உதவுகிறது.
புத்தகங்களைத் தாண்டிய முறை சாராத கல்விதான் ஒருவனை முழுமை யாக்குகிறது. அடிப்படைக் கல்வி என்பது அதற்கான உந்துசக்தியை வழங்குகிறது. நிறையப் படித்தவர்கள் கல்விக்கூடங்களைத் தாண்டி தாங்கள் கற்றவையே அதிகம் என்கிற வாக்கு மூலத்தை வாசித்ததை நாம் அறிந்திருக் கிறோம்.
தொடர்ந்து வாசிப்பது, குறிப்பெடுப்பது, விவாதிப்பது, ஆய்விதழ்களை அலசுவது, நேரடியாகக் களத்திற்குச் சென்று அனுபவம் பெறுவது போன்ற நடவடிக்கைகளே நாம் கற்றவற்றைத் திடப்படுத்தவும் செறிவுபடுத்தவும் உதவியாக இருக்கும். இல்லாவிட்டால் நாம் படித்தவை பெயருக்குப் பின்னாலி ருக்கிற எழுத்துகளாக மட்டுமே கண் சிமிட்டி நம்மை அடிக்கடி பரிகசிக்கும்.
கல்வி என்பது வரையறைகளைத் தாண்டியது. படித்த பொருண் மையில்தான் நிறையப் படிக்க வேண்டும் என்கிற கடிவாளத்தை நாம் தளர்த்த வேண்டும். படித்தது வேதியியலாக இருக்கலாம். ஆனால், வாசிப்பது வேதியியலை மட்டுமல்லாமல், இலக்கியம், இயற்பியல் என்று பல்வேறு திசைகளில் விரிய வேண்டும். அப்போது நம் புரிதல் வேதியியலிலும் ஆழப்படும். படித்துக்கொண்டும் வாசித்துக் கொண்டும் இருக்கிற மனிதன் தெளிவான சிந்தனையுடன் தன்னுடைய அறிவை நடைமுறைப்படுத்த முடியாது.
களத்தில் நிகழ்பவற்றைக் கருத்தில் கொள்கிறபோதுதான் அவனுடைய ஏட்டுச்சுரைக்காயை அவன் பொய் விதைகளின்றிப் புதுப்பிக்க முடியும். பரிசோதனைக்கூடத்திற்கும் பண்ணைக்குமான இடைவெளியை இட்டு நிரப்ப முயல்வதுதான் கல்வி. அதற்குப் புத்தகங்களைத் தாண்டிப் பயணிப்பதும், பயிற்சிப் பட்டறைகளில் பங்குகொண்டு அறிஞர்களின் விவாதங்களில் பங்கேற்பதும், கட்டுரைகள், நூல்கள் என்று தான் புரிந்துகொண்ட வற்றை ஆவணமாக்கி விவாதத்திற்கு உட்படுத்துவதும் அவசியம்.
கல்வியின் நோக்கம் நம்மை அறிவாளி என்று அடையாளப்படுத்திக்கொள்வதில் முடிந்துவிடுவதில்லை. இந்த உலகத்தின் ஒட்டுமொத்த அறிவுச்செறிவுக்கு நாமும் ஏதேனும் ஒரு துளியையாவது கூடச் சேர்த்திருக்கிறோமா என்பதை நமக்கு நாமே பரிசீலித்துக்கொள்ள வேண்டும். அந்த அறிவுச்செறிவு மானுடத்தின் மேம்பாட்டிற்காகப் பயன்பட வேண்டும்.
கல்வியின் நோக்கம்: கற்ற கல்வியையும் பெற்ற அறிவையும் மோசடியாளர்களுக்கும் மக்கள் விரோத செயல்பாடுகளுக்கும் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கப் போட்டிபோடும் நிறுவனங்களுக்காகவும் பயன்படுத்தி, அவர்கள் தூக்கிப் போடுகிற எலும்புத்துண்டுகளுக்காக வாலாட்டுகிறவர்களாக இருக்கிறவர் களைவிடப் படிக்காதவர்கள் பல மடங்கு மேல். கல்வியைப் பெற்றவர்கள் எளிய மக்களுக்காகவும் நலிந்தவர்களுக் காகவும் தங்கள் அறிவையும் அனுபவத்தையும் பயன்படுத்த வேண்டும்.
அதனால் தான் மாபெரும் விஞ்ஞானிகள் தங்களுடைய கண்டறிதல்களை எளிமையாக்கி, பலரும் பயன்படுத்தத்தக்க வகையிலும் மலிவுவிலையில் கிடைக்கும் வகையிலும் உருவாக்கினார்கள். மேல்தட்டு மட்டுமே பயன்படுத்தி வந்த பல பொருள்களை இன்று சாமானியர்களும் பயன்படுத்தும் சம உடைமையை அவர்கள் நிகழ்த்திக் காட்டினார்கள். கல்வி பெறுவது நம்மை மேன்மை யானவர்களாகவும், மென்மையானவர் களாகவும், மானுடத்திற்காகக் குரல் கொடுப்பவர்களாகவும் மாற்றும்போது தான் கல்விக்கான நோக்கம் முழுமை யடையும்.
- கட்டுரையாளர் வெ.இறையன்பு, முன்னாள் தலைமைச் செயலர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT