Published : 31 Oct 2025 06:31 AM
Last Updated : 31 Oct 2025 06:31 AM
சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சிப் படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகையைப் பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.
இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தி வருகிறது. இதில், சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
நடப்பு ஆண்டு 2-ம் கட்ட சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு டிசம்பர் 18-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவு கடந்த செப்டம்பர் 25-ல் தொடங்கி அக்டோபர் 27-ம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய என்டிஏ வாய்ப்பு வழங்கியுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் https://csirnet.nta.ac.in என்ற இணையதளம் வழியாக நாளைக்குள் (நவ.1) திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
இதில் ஏதேனும் சந்தேகங்கள், சிரமங்கள் இருந்தால் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி எண் அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை https://nta.ac.in என்ற தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT