Published : 29 Oct 2025 09:12 PM
Last Updated : 29 Oct 2025 09:12 PM
மதுரை: கல்வியல் கல்லூரிகளில் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பம் பதிவேற்றுவதில் உள்ள குளறுபடியால் தகுதியான ஆசிரியர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
தமிழகளவில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,703 பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே 43 பணியிடம் நிரப்பப்படுகிறது. இதற்கான அறிவிப்பு கடந்த 16-ம் தேதி வெளியிடப்பட்டது.
முதுநிலை டிகிரியுடன் ஸ்லெட், நெட் தகுதி தேர்வு தேர்ச்சி அல்லது பிஎச்டி தகுதியும், கல்வியியல் கல்லூரி ஏதாவது முதுநிலை டிகிரியுடன் எம்எட் ஸ்லெட், நெட் அல்லது பிஎச்டி முடித்து இருக்க வேண்டும். இத்தகுதியுள்ளவர்கள் நவம்பர் 19ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்வியியல் கல்லூரிக்கு தகுதியான ஆசிரியர்கள் ஆன்லைனில் விண்ணப்ப விவரங்களை பதிவேற்ற முடியாமல் குளறுபடி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான (எம்ஏ, எம்எஸ்சி, எம்.காம்) காலத்தில் முதுநிலையில் என்ன மேஜர் (எம்ஏ தமிழ், ஆங்கிலம் மற்றும் எம்எஸ்சி கணிதம், இயற்பியல்) என்ற உட்பிரிவு இன்றி எம்எட் என்று இருக்கிறது.
இதனால் விண்ணப்பிக்க முடியவில்லை. இது பற்றி தமிழ்நாடு கல்லூரி ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகியபோது, விண்ணப்பிக்கும் இணைய முகவரியில் (வெப்சைட்) குளறுபடி சரி செய்யப்படும் என, உறுதியளிக்கப்பட்ட நிலையிலும் இன்னும் சரியாகாமல் தகுதியுள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதாக புகார் கூறுகின்றனர்.
பார்த்தசாரதி உள்ளிட்ட ஆசிரியர்கள் கூறுகையில், ‘தமிழகம் முழுவதும் கல்வியியல் கல்லூரிக்கு என சுமார் 1 லட்சம் பேர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். சில ஆண்டுக்கு பிறகு தற்போதே அரசு கல்வியியல் கல்லூரிகளில் வாய்ப்பு வந்துள்ளது. ஆனாலும், ஆன்லைனின் விண்ணப்பம் பதிவேற்றுவதில் குளறுபடி, குழப்பம் இருப்பதால் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.
கல்வியியல் கல்லூரிக்கு தகுதி குறித்து தெளிவான விவரம் குறிப்பிடவில்லை. கடந்த முறை சமூகவியல், தத்துவவியல், உளவியல் டிகிரி இல்லை என திருப்பிவிடப்பட்டனர். இன்னும் 10 நாளே இருப்பதால் தேர்வு வாரியம் இணைய முகவரியில் உள்ள குளறுபடிகளை சரி செய்ய வேண்டும். குழப்பத்தால் தகுதி இருந்தும் ஆயிரக் கணக்கானோர் பாதிக்கப்படுவர்.” என்று ஆசிரியர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT