Published : 29 Oct 2025 05:58 AM
Last Updated : 29 Oct 2025 05:58 AM
சென்னை: சென்னை ஐஐடி பேராசிரியர்கள் 3 பேர் தேசிய அறிவியல் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பாராட்டு தெரிவித்தார். அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றுவோருக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் தேசிய அறிவியல் விருது (ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார்) வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த விருது, விஞ்ஞான் ரத்னா, விஞ்ஞான் ஸ்ரீ, விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர், விஞ்ஞான் டீம் என 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் விருதுக்கு சென்னை ஐஐடி பேராசிரியர்கள் தலப்பில் பிரதீப், மோகனசங்கர் சிவப்பிரகாசம், ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகிய 3 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
வேதியியல் துறை பேராசிரியர் தலப்பில் பிரதீப் விஞ்ஞான் ஸ்ரீ விருதும், எலெக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் துறை பேராசிரியர் மோகனசங்கர் சிவபிரகாசம், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங் துறை பேராசிரியை ஸ்வேதா பிரேம் அகர்வால் ஆகியோர் விஞ்ஞான் யுவ சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதும் பெறுகின்றனர்.
தேசிய அறிவியல் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள பேராசிரியர்கள் மூவருக்கும் ஐஐடி இயக்குநர் வீ.காமகோடி பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறும் போது, “அறிவியல், தொழில்நுட்பம், புதுமை கண்டுபிடிப்புகள் துறைகளில் சிறப்பாகப் பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படும் உயர்ந்த விருதான தேசிய அறிவியல் விருதுக்கு எங்கள் பேராசிரியர்கள் தேர்வுசெய் யப்பட்டிருப்பது பெருமையாகவும் கவுரவமாகவும் இருக்கிறது.
அவர்களின் சாதனையானது நாட்டின் அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியில் சென்னை ஐஐடியின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT