Published : 15 Oct 2025 04:33 PM
Last Updated : 15 Oct 2025 04:33 PM
‘உன் கைரேகையைப் பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்துவிடாதே. ஏனென்றால் கையே இல்லாத வனுக்குக்கூட எதிர்காலம் உண்டு' என்று கூறி மாணவர்கள் மனதில் வாழ்க்கை மீது நம்பிக்கை விதைத்தவர் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். தன்னம்பிக்கை, கடின உழைப்பு, விடா முயற்சி, அறிவியல் வளர்ச்சி முதலானவையே நம்மையும் நாட்டையும் முன்னேற்றப் பாதை யில் இட்டுச் செல்லும் என்று இளையோருக்கு உணர்த்தும் வகையில் வாழ்ந்து காட்டியவர்.
அவரைப் போற்றும் விதமாக அவர் பிறந்த நாளான அக்டோபர் 15 உலக மாணவர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. கல்வி பெறுவதற்கான சம வாய்ப்பு அனைவரையும் சென்றடைய வேண்டும் என்பதை முன்னிறுத்தவே ஐக்கிய நாடுகள் அவை கடந்த 2010ஆம் ஆண்டில் இந்நாளைத் தெரிவுசெய்தது.
இளையோரின் நேசன்: ‘சமூகத்தைப் புரட்டிப்போடக்கூடிய சக்திவாய்ந்த கருவி கல்வி’ என்றார் கலாம். இதனை அவர் ஆழமாக நம்பியதால்தான் விஞ்ஞானியாக, குடியரசுத் தலைவராகப் பல உயரிய பொறுப்புகளை வகித்த பிறகும் தனது இறுதி மூச்சுவரை மாணவர்களைத் தேடிச் சென்று உரையாடினார். இளையோருக்கு வாழ்க்கையின் சாராம்சத்தைப் போதித்து அவர்களுக்கு உத்வேகம் அளிப்பதில் நாட்டம் கொண்டிருந்தார். பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளுக்குச் சென்று அங்குள்ள மாணவர்களிடம் தாம் பெற்ற படிப்பினையைப் பகிர்ந்தார்.
இதுபோக, உலக மாணவர் நாள் மேலும் பல காரணங்களுக்காகக் கடைப்பிடிக்கப் படுகிறது. எதிர்காலத் தலைவர்களாக, புதிய கண்டறிதல்களை நிகழ்த்துபவர்களாக மாணவர்கள் உருவாக அழைப்புவிடுக்கும் நாள் இது. கல்வி எவ்வாறு ஒருவரின் தலையெழுத்தைத் திருத்தி சிறப்பாக எழுத வல்லது என்பதை உரக்கச் சொல்லும் நாள் இது. ஆண்டுதோறும் இந்நாளுக்கான கருப்பொருள் மற்றும் உபதலைப்புகள் தெரிவு செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் கடந்த ஆண்டில், ‘புதுமை மற்றும் மாற்றத்துக் கான சமூகப் பிரதிநிதிகளாக மாணவர்களை அதிகாரப்படுத்துதல்’ என்கிற தலைப்பை ஒட்டி பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் பலவிதமான போட்டிகள், நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து நடப்பாண்டிலும் கலை, அறிவியல், கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் இந்தியாவில் மட்டு மல்லாமல் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன.
எப்படிக் கொண்டாடலாம்? - கல்வியின் முக்கியத்துவத்தையும் மாணவர்களின் ஆற்றலையும் உலகம் அறியச் செய்யும் விதமாக அர்த்தமுள்ள நிகழ்ச்சிகளை இந்நாளில் நடத்துவது கலாமுக்குச் செய்யும் உரிய மரியாதையாக இருக்கும்.
* மாணவர்களின் திறன்களை மெருகேற் றுதல், மனநலம் பேணுதல், அறிவியல் கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்ளு தல், பணிவாழ்க்கையைத் திட்டமிடுதல் ஆகியவற்றை முன்னிறுத்தி துறைசார் இளம் வல்லுநர்களைக் கொண்டு கல்விப் பயிலரங்கம் நடத்தலாம்.
* சமூக அக்கறையை வெளிப்படுத்தும் வித மாகச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்பாடுகளில் இளம் தலைமுறையினர் ஈடுபடலாம்.
* மொழி, பண்பாடு அடிப்படையிலான பன்மைத்துவத்தைக் கொண்டாடும் வகையில் கலைத் திருவிழா, உணவுத் திருவிழா ஏற்பாடு செய்யலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT