Published : 01 Oct 2025 06:54 AM
Last Updated : 01 Oct 2025 06:54 AM
சென்னை: இந்த ஆண்டு முதல், கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி) சேருவதற்கான வயது வரம்பு 40 ஆகவும், பெண்கள் மற்றும் இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 43 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் உயர்கல்வித் துறை செயலர் பொ.சங்கர் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தற்போது, கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் (பிஏ, பிஎஸ்சி,பிசிஏ, பி.காம், பிபிஏ, பிபிஎம் போன்றவை) சேருவதற்கான வயது வரம்பு 21 ஆக இருந்து வருகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கு 5 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி, எம்பிசி, பிசி, பிசி-முஸ்லிம் ஆகிய இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும், பெண்களுக்கும் 3 ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) மாணவர்களின் நலன் கருதி அனைத்து அரசு, அரசு உதவிபெறும், மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான உச்ச வயது வரம்பை அனைத்து பிரிவு மாணவர்களுக்கும் 40 என நிர்ணயித்து ஆணை வழங்குமாறு கல்லூரி கல்வி ஆணையர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பான கல்லூரி கல்வி ஆணையரின் கருத்துருவை ஆய்வு செய்து 2025-2026-ம் கல்வி ஆண்டு முதல் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு மேலும் 5 ஆண்டுகள் வயது தளர்வும் (45 வயது வரை), இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு மேலும் 3 ஆண்டுகள் வயது தளர்வும் (43 வயது வரை) அளித்து அரசு உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT