Published : 27 Sep 2025 06:07 AM
Last Updated : 27 Sep 2025 06:07 AM
சென்னை: காலாண்டு விடுமுறையில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் காலாண்டுத் தேர்வு நடத்தப்படும்.
அந்தவகையில் நடப்பு கல்வியாண்டில் காலாண்டுத் தேர்வுகள் கடந்த 10-ம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தன. இதையடுத்து மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை இன்று (செப்.27) முதல் அக்டோபர் 5-ம் தேதி வரை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் அக்.6-ம் தேதி திறக்கப்பட இருக்கின்றன.
இந்நிலையில் காலாண்டு விடுப்பில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
அவற்றை மீறும் பள்ளிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. எனினும், சென்னை உட்பட சில மாவட்டங்களில் தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT