Published : 08 Sep 2025 03:14 PM
Last Updated : 08 Sep 2025 03:14 PM

பொது மக்கள் பங்குத் தொகை செலுத்தியும் தரம் உயர்த்தப்படாத ஈரோடு மலைக் கிராம பள்ளிகள்!

ஈரோடு மாவட்ட மலைக் கிராமங்களில் செயல்படும் அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்த, பங்களிப்புத் தொகை செலுத்தி பல ஆண்டுகள் ஆகியும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், மலைக் கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட, ஆசனூர் ஊராட்சியில் கோட்டாடை மலைக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தைச் சுற்றி குழியாடா, ஒசட்டி, உப்பட்டி, புதுக்காடு, சோக்கிதொட்டி, கல்கூசி, பீமரதொட்டி தேவர்நத்தம், அட்டப்பாடி, சீகட்டி, கீள்மாவள்ளம், மேல்மாவள்ளம் என 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளன.

கடந்த 1961-ம் ஆண்டு, கோட்டாடையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்ட நிலையில், 1996-ல் நடுநிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் தற்போது 59 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கோட்டாடை கிராமத்துக்கு அருகில், தேவர்நத்தம் கிராமத்தில் ஒரு தொடக்கப்பள்ளியும், மாவள்ளத்தில் ஒரு தொடக்கப்பள்ளியும் அமைந்துள்ளது.

போக்குவரத்து வசதி இல்லை: கோட்டாடை நடுநிலைப்பள்ளியில், 8-ம் வகுப்பு நிறைவு செய்தவர்கள், 9-ம் வகுப்பிற்கு செல்வதாயின், 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்குத்தான் செல்லவேண்டும். இப்பகுதிக்கு போக்குவரத்து வசதி குறைவாக உள்ளது.

குறிப்பாக, கோட்டாடை பகுதியிலிருந்து, ஆசனூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப்பள்ளிக்கு, 59 மாணவ, மாணவியர் தினமும் பேருந்தில் செல்கின்றனர். பள்ளி நேரத்துக்கு பேருந்து இல்லாததால், காலை 6 மணிக்கு புறப்படும் பேருந்தில், காலை உணவையும் சேர்த்து எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு பயணிக்கும் இவர்கள், மாலை 7 மணிக்குத்தான் வீடு திரும்ப முடிகிறது.

இத்தகைய சிரமங்களால், பல மாணவ, மாணவியர் 8-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்தி வருகின்றனர். குழந்தைத் திருமணங்கள் நடக்கவும் இப்பிரச்சினை அடிப்படைக் காரணமாக உள்ளது.

ரூ.1 லட்சம் பங்குத் தொகை: இப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் கிராம மக்கள் தொடர் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு பொதுமக்களின் பங்களிப்புத்தொகையாக ரூ. 1 லட்சம் செலுத்த வேண்டும் என அரசு தெரிவித்தது.

இதன்படி, கிராமமக்கள் இத்தொகையை திரட்டி அரசுக்கு செலுத்தினர். அதன்பின், 12 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், பள்ளி தரம் உயர்த்தப்படுவது தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

இதேபோல் சத்தியமங்கலம் ஒன்றியத்தில் 105 மாணவர்கள் பயிலும் பவளக்குட்டை நடுநிலைப் பள்ளியில் மற்றும் 110 மாணவர்கள் பயிலும் கரளயம் நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்தவும், பொதுமக்கள் தலா ரூ. 1 லட்சம் செலுத்தியுள்ளனர். ஆனால், இதுவரை பள்ளிகள் தரம் உயர்த்துதல் தொடர்பான அறிவிப்பு வெளிவரவில்லை.

அந்தியூரிலும் பாதிப்பு: அந்தியூர் வட்டாரம் பர்கூர் ஊராட்சியில் 156 மாணவர்கள் பயிலும் கொங்காடை உயர்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாகவும், சோளகனை, கத்திரிமலை, குட்டையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளியாகவும் உயர்த்தவும் திட்ட அறிக்கைகள் அனுப்பப்பட்டு, பல ஆண்டுகளாகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஈரோடு மாவட்ட மலைக் கிராம மக்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தப்படுத்தும் வகையில், பள்ளிகளை தரம் உயர்த்துதல், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கைகளை அரசு சிறப்பு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும் என மலைக் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பள்ளி மேலாண்மைக் குழு தீர்மானம்: கோட்டாடை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் அனிதா முன்னிலையில், தலைமை ஆசிரியர் (பொறுப்பு) ரவி தலைமையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் கோட்டாடை பள்ளியை தரம் உயர்த்த ரூ. 1 லட்சம் பங்களிப்புத் தொகை செலுத்தி 12 ஆண்டுகள் ஆகியும், இதுவரை தரம் உயர்த்தவில்லை. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. எனவே, காலதாமதம் இன்றி இப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x