Published : 25 Aug 2025 06:31 AM
Last Updated : 25 Aug 2025 06:31 AM

​​​​​​​பாலிடெக்னிக் படிப்பில் கொள்குறி வகை வினா முறை: தொழில்நுட்பக் கல்வியின் தரம் பாதிக்கப்படும் என ஆசிரியர்கள் அச்சம்

சென்னை: இந்​தக் கல்வி ஆண்டு முதல் பாலிடெக்​னிக் டிப்​ளமா படிப்​பில் கொள்​குறி வகை வினா முறையை அமல்​படுத்த தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம்

முடிவு செய்​துள்​ளது. இதனால், தொழில்​நுட்​பக்​கல்​வி​யின் தரம் பெரிதும் பாதிக்​கப்​படும் என்று பாலிடெக்​னிக் கல்​லூரி ஆசிரியர்​கள் அச்​சம் தெரிவிக்​கின்​றனர்.

தமிழகத்​தில் 54 அரசு பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் 400-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பாலிடெக்​னிக் கல்​லூரி​களும் இயங்கி வரு​கின்​றன. இக்​கல்​லூரி​களில் பொறி​யியல் பாடப்​பிரி​வில் 3 ஆண்டு கால டிப்​ளமா படிப்​பு​கள் வழங்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில் சிவில், மெக்​கானிக்​கல், எலெக்ட்​ரிக்​கல், எலெக்ட்​ரானிக்ஸ் மற்​றும் கம்​யூனிகேஷன், கம்ப்​யூட்​டர் சயின்​ஸ், ஆட்​டோமொபைல் என வெவ்​வேறு பாடப்​பிரிவு​களில் ஏறத்​தாழ ஒரு லட்​சம் இடங்​கள் உள்​ளன. இருப்​பினும் கடந்த சில ஆண்​டு​களாகவே பாலிடெக்​னிக் கல்​லூரி​களில் அனைத்து இடங்​களும் நிரம்​புவ​தில்​லை. ஏறத்​தாழ 50%இடங்​களே நிரம்​பு​கின்றன.

மாணவர்​களுக்கு செமஸ்​டர் தேர்வு முறை இருந்து வரு​கிறது. செமஸ்​டர் தேர்​வில் மொத்​த​முள்ள 100 மதிப்​பெண்​ணில் 60 மதிப்​பெண் தியரி தேர்வு, மீத​முள்ள 40 மதிப்​பெண் இண்​டர்​னல் எனப்​படும் அகம​திப்​பெண் ஆகும். தியரி தேர்​வில் தேர்ச்சி பெற குறைந்​த​பட்​சம் 40 சதவீத மதிப்​பெண் பெற வேண்​டும். தியரி தேர்​வில் கேட்​கப்​படும் வினாக்​களுக்கு மாணவர்​கள் விரி​வாக விடை எழுத வேண்​டும்.

இந்​நிலை​யில், இதற்கு பதிலாக கொள்​குறி வகை வினா முறையை நடப்பு கல்வி ஆண்டு முதல் அமல்​படுத்த தொழில்​நுட்​பக் கல்வி இயக்​ககம் முடிவு செய்​துள்​ளது. இதனால் மாணவர்​களின் படைப்​பாற்​றலை​யும், புரிந்​து​கொள்​ளும் திறனை​யும், சிக்​கல்​களுக்கு தீர்வு காணும் திறனை​யும் மதிப்​பிட முடி​யாது என்று ஆசிரியர்​கள் அச்​சம் தெரி​வித்​துள்​ளனர்.

இதுதொடர்​பாக அவர்​கள் கூறிய​தாவது: கொள்​குறி வகை வினா முறை​யால் நினை​வாற்​றலைத்​தான் சோதித்து அறிய முடி​யுமே தவிர பயன்​பாட்டு அறிவையோ சிந்​திக்​கும் ஆற்​றலையோ கண்​டறிய முடி​யாது. அவர்​களின் தொழில்​நுட்​பத் திறன் பாதிக்​கப்​படும். தொழில்​நுட்​பக் கல்வி என்​பது படைப்​பாற்​றல், சிக்​கல்​களுக்கு தீர்வு காணுதல், படம் வரைவது, திட்​ட​மிட்ட விளக்க முறை என பலவகை திறன்​களை உள்​ளடக்​கியது. அப்​படி இருக்​கும்​போது, கொள்​குறிவகை வினா முறை​யால் இந்த திறன்​களை எப்​படி மதிப்​பீடு செய்ய முடி​யும். அது குருட்டு மனப்​பாடத்​துக்கு மாணவர்​களை அழைத்​துச் செல்​லுமே ஒழிய பாடங்​கள் மீதான புரிதலை நிச்​ச​யம் ஊக்​குவிக்​காது.

பாலிடெக்​னிக் முடித்​து​விட்டு பொறி​யியல் படிப்​பில் சேரும் மாணவர்​கள் அதற்​கான பாடத்​திட்​டத்​தில் 60 சதவீதம் படித்து முடித்​தவர்​களாக இருப்​பர். ஆனால், தற்​போது பாலிடெக்​னிக் பாடத்​திட்​டம் குறைக்​கப்​பட்​டுள்​ள​தால், பொறி​யியல் பட்​டப்​படிப்​பில் பாலிடெக்​னிக் மாணவர்​கள் தேர்ச்சி பெற சிரமப்​படு​கிறார்​கள். இத்​தகைய சூழலில் தற்​போது அப்​ஜெக்​டிவ் முறையி​லானகேள்​வி- பதில் முறை அமல்​படுத்​தி​னால் மாணவர்​கள் மேலும் பாதிக்​கப்​படு​வர். இதனால், ஒட்​டுமொத்த தொழில்​நுட்​பக் கல்​வி​யின் தரமும் பாதிக்​கும்.

பாலிடெக்​னிக் முடித்து வெளியே வரும் மாணவர்​கள் தொழில்​நுட்​பத்​திறன் மிகுந்​தவர்​களாக இருக்க மாட்​டார்​கள். மாறாக தொழிலா​ளர் என்ற நிலை​யில்​தான் இருப்​பார்​கள். வேண்​டு​மா​னால், தியரி தேர்​வில் தலா 50 சதவீத கேள்வி​களை கொள்​குறிவகை வினா முறை​யிலும், விரி​வாக பதில் எழுதும் வகை​யிலும் அமைக்​கலாம். இவ்​வாறு அவர்​கள் கூறினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x