Published : 24 Jul 2025 04:55 PM
Last Updated : 24 Jul 2025 04:55 PM
சென்னை: மாநில தகுதித் தேர்வில் தமிழ் வழி ஒதுக்கீடு கோரும் விண்ணப்பதாரர்கள், அதற்கான சான்றிதழ்களை ஆகஸ்ட்7-ம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் மாநில தகுதித் தேர்வு (செட் தேர்வு) கடந்த மார்ச் 6 முதல் 9-ம் தேதி வரை நடத்தப்பட்டது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி அடிப்படையில் செட் தேர்வில் தமிழ் வழியில் பயின்றோருக்கு (பிஎஸ்டிஎம்) இடஒதுக்கீடு வழங்கி உயர் கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
செட் தேர்வு எழுதியுள்ள விண்ணப்பதாரர்களில் தமிழ் வழி ஒதுக்கீ்ட்டின் கீழ் முன்னுரிமை கோரும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் தாங்கள் ஒன்றாம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை (மாதிரி படிவத்தில் உள்ளபடி) உரிய அலுவலர்களிடம் கையொப்பம் பெற்று ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் (www.trb.tn.gov.in) ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
குறிப்பிடப்பட்ட காலக்கெடுவுக்குள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்கள் அப்பிரிவின் கீழ் முன்னுரிமை கோர இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT