Published : 20 Jul 2025 12:22 AM
Last Updated : 20 Jul 2025 12:22 AM
சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான முதல் சுற்று கலந்தாய்வில் 30,552 பேருக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, 2-வது சுற்று கலந்தாய்வு 26-ம் தேதி தொடங்க உள்ளது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு இந்த ஆண்டு 3 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.
அதன்படி, முதல் சுற்று கலந்தாய்வு கடந்த 14-ம் தேதி தொடங்கி 18-ம் தேதி முடிவடைந்தது. இதில் கட்-ஆப் மதிப்பெண் 200 முதல் 179 வரை பெற்ற 39.145 மாணவர்கள் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். அதில் 36,731 பேர் விருப்பமான கல்லூரியை தேர்வு செய்த நிலையில், 17-ம் தேதி காலை 10 மணிக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. அதை அவர்கள் உறுதிப்படுத்த 18-ம் தேதி மாலை 5 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்திய 30,552 பேருக்கு நேற்று காலை 10 மணிக்கு இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது. இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள் ஜூலை 23-ம் தேதிக்குள் தாங்கள் தேர்வு செய்துள்ள பொறியியல் மாணவர் சேர்க்கை மையத்துக்கு சென்று, அசல் சான்றிதழ்களை சமர்ப்பித்து கல்விக் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். 23-ம் தேதிக்குள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறியியல் கல்லூரிக்கு சென்று, சேர்க்கை நடைமுறைகளையும் முடித்துவிட வேண்டும் என்று தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் அறிவுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் கல்லூரியில் சேராவிட்டால், அவர்களுக்கு வழங்கப்பட்ட இடங்கள் ரத்து செய்யப்பட்டு, அடுத்த நிலையில் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஏற்கெனவே அறிவித்தபடி, 2-வது சுற்று கலந்தாய்வு ஜூலை 26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதி முடிவடையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT