Published : 18 Jul 2025 06:02 AM
Last Updated : 18 Jul 2025 06:02 AM
சென்னை: தொலைதூரக் கல்வி ஜூலை பருவ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக இக்னோ பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக் கழகத்தின் (இக்னோ) சென்னை மண்டல முதுநிலை இயக்குநர் கே.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின் பல்கலைக்கழகமான இக்னோ தொலைதூரக் கல்வி திட்டம் வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகளில் சான்றிதழ், டிப்ளமா, இளநிலை, முதுநிலை படிப்புகளை வழங்கி வருகிறது. தற்போது, மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு ஜூலை பருவ சேர்க்கைக்கான கடைசி தேதி இந்த மாதம் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, தொலைதூரக்கல்வியில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இக்னோவில் பிஇ, பிகாம், பிஎஸ்சி படிப்புகளில் சேரும் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்களை பல்கலைக் கழகத்தின் இணையதளத்தில் (www.ignou.ac.in) அறிந்து கொள்ளலாம்.
மேலும், சென்னை வேப்பேரி பெரியார் திடலில் இயங்கி வரும் மண்டல அலுவலகத்தை 044-26618040 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இக்னோவின் ஆன்லைன் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://ignouiop.samarth.edu.in என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT