Last Updated : 15 Jul, 2025 04:15 PM

 

Published : 15 Jul 2025 04:15 PM
Last Updated : 15 Jul 2025 04:15 PM

புதுவையில் அனைத்து படிப்புகளிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இடஒதுக்கீடு: முதல்வர் ரங்கசாமி

முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் மட்டுமின்றி, பிற படிப்புகளுக்கும் 10% இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

அரசு பள்ளி கல்வி இயக்ககம் சார்பில் காமராஜர் பிறந்த நாளையொட்டி, மாணவர் நாள் விழா கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட முதல்வர் ரங்கசாமி காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசியது: ”காமராஜர் ஊழலற்ற ஆட்சியை கொடுத்தார். கல்விக்கு முக்கியத்துவம் அளித்தார். நாட்டின் அனைத்து தலைவர்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்தார்.

காமராஜர் வழியில் புதுச்சேரியில் அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அரசு செயல்பட்டு வருகிறது. எத்தனையோ திட்டங்களை பிள்ளைகளுக்கு அரசு கொடுத்துக் கொண்டிருக்கிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் பிள்ளைகளுக்கு பல சலுகைகளை வழங்குகிறது. கல்விக்காக அரசானது ஆண்டுக்கு ரூ.1,350 கோடியை ஒதுக்குகிறது. இதில் பள்ளிக் கல்விக்காக ரூ.950 கோடியை செலவிடுகிறது.

அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டு படித்து வருகின்றனர். பிற படிப்புகளுக்கும் 10 சதவீத இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அது இந்த கல்வியாண்டிலேயே நடைமுறைப்படுத்தப்படும். லேப் டாப் வழங்கவில்லை என்ற குறை இருக்கின்றது. இன்னும் ஒரு மாதத்துக்குள் லேப் டாப் வழங்கப்படும். பள்ளி கல்வி மட்டுமின்றி உயர்கல்வி கொடுப்பதிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. எல்லோரும் படிக்க வேண்டும். அதற்கு அடிப்படை கல்வி. அந்த கல்வியை கொடுப்பது அரசின் கடமை. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், உலகம் முழுவதும் செல்ல வேண்டும்.

அதற்கான வாய்ப்பை நாம் உருவாக்கி தர வேண்டும். அதன் மூலம் பல விஞ்ஞானிகள், கண்டுபிடிப்புகள் வர வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். அதற்குரிய வாய்ப்புகளை நம்முடைய பிள்ளைகளுக்கு உருவாக்கி தர வேண்டும் என்பதும் நம்முடைய அரசின் எண்ணம். பள்ளி கல்வி சிறப்பாக இருந்தால் வாழ்க்கையில் உயர முடியும். பள்ளிகளில் மாணவர்களுக்கு சரலமாக பேசும் பழக்கம் வர வேண்டும் என்பதை அரசு உணர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது. தேவையான கல்லூரிகளை கொண்டு வரவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

நல்ல நூல்களை படித்தால் நல்ல சிந்தனையாளராக வர முடியும். அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவ முடியும். எனவே பிள்ளைகள் நல்ல நூல்களை வாசிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக படித்த வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்று முதல்வர் ரங்கசாமி கூறினார். இவ்விழாவில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், ஜான்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x