Published : 07 Jul 2025 12:33 AM
Last Updated : 07 Jul 2025 12:33 AM
சென்னை: இலவச கட்டாய கல்வி திட்டத்தில் சேர்க்கை பெற்ற ஏழை குழந்தைகளை கல்வி கட்டணம் செலுத்துமாறு பல தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி (ஆர்டிஇ) தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்கள் வழங்கப்படும். அந்த வகையில், தமிழகம் முழுவதும் உள்ள 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளில் சுமார் 1.10 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் சேரும் குழந்தைகள் 8-ம் வகுப்பு வரை இலவசமாக படிக்கலாம். அவர்களுக்கான கட்டணத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து தனியார் பள்ளிகளுக்கு வழங்கும். தமிழகத்தில் கடந்த 2013-ல் அமல்படுத்தப்பட்ட ஆர்டிஇ திட்டத்தின்கீழ் இதுவரை சுமார் 4 லட்சம் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இதற்கிடையே, புதிய தேசிய கல்விக் கொள்கையை தமிழகம் ஏற்க மறுப்பதால், பள்ளிக்கல்வி திட்டங்களுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதுதவிர, முந்தைய கல்வி ஆண்டுகளுக்கான நிலுவை என மத்திய அரசு சுமார் ரூ.600 கோடி நிதி வழங்க வேண்டி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கையை தொடங்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கவில்லை.
இது தொடர்பான வழக்கில், கல்வி உரிமை சட்டத்தின்படி குறிப்பிட்ட சதவீத நிதியை மாநில அரசுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு இதுவரை தனது பங்கு நிதியை ஒதுக்கவில்லை. மாநில அரசும் தனியார் பள்ளிகளுக்கு 2 ஆண்டுகளுக்கான நிதியை விடுவிக்கவில்லை. இதனால், தற்போது ஆர்டிஇ திட்டத்தில் படித்து வரும் மாணவர்களை கல்வி கட்டணம் செலுத்துமாறு பல தனியார் பள்ளிகள் கட்டாயப்படுத்துவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் நமச்சிவாயம் கூறியதாவது: ஆர்டிஇ திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக நிதி வழங்கப்படாததால், கட்டணத்தை செலுத்துமாறு மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் அழுத்தம் தருகின்றன. பெரும்பாலான பெற்றோர் வேறு வழியின்றி முன்பணமாக குறிப்பிட்ட தொகையை செலுத்திவிட்டனர். அரசிடம் இருந்து பணம் வந்தபிறகு, அந்த தொகையை திருப்பி தருவதாக பள்ளி நிர்வாகங்கள் கூறியுள்ளன. இதனால், ஏழை மாணவர்களின் பெற்றோர் பாதிக்கப்படுவார்கள். எனவே, தமிழக அரசு இதில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT