Published : 03 Jul 2025 01:21 PM
Last Updated : 03 Jul 2025 01:21 PM
சென்னை: நீட் தேர்வின்போது மின் தடையால் பாதிக்கப்பட்டதாகக் கூறி, மறு தேர்வு நடத்த கோரிய மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையில் அன்றைய தினம் பெய்த கனமழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் தங்களால் சரியாக தேர்வு எழுத முடியவில்லை என்பதால் மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரி, ஆவடி கேந்திரிய வித்யாலயா பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 13 மாணவர்கள் உள்ளிட்ட 16 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில், மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மாணவர்கள் பெரும்பாலான கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதால் மறு தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு முகமை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், நாடு முழுவதும் 22 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள நிலையில் மறுதேர்வு நடத்த உத்தரவிட்டால் அது பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மாணவர்கள் மேல் முறையீடு செய்திருந்தனர். இந்த மேல் முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வு விசாரித்தது.
தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “வழக்கு தொடர்ந்த மாணவர்களில் பெரும்பாலானோர் மொத்தம் 180 கேள்விகளுக்கு 100 கேள்விகளுக்கு விடை அளித்துள்ளனர். ஒரு மாணவர் 179 கேள்விகளுக்கு விடையளித்துள்ளார். அதனால், மின்தடையால் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.” என தெரிவித்தார்.
இதையடுத்து, மறு தேர்வு நடத்தக்கோரிய மேல் முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்த நீதிபதிகள், இன்று தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், “தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக நிரூபிக்காத வரை, மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனவும், மறு தேர்வு நடத்த உத்தரவிட்டால் 20 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவர் என்பதால், வழக்கை ஏற்க முடியாது.” எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT