Published : 02 Jul 2025 08:11 PM
Last Updated : 02 Jul 2025 08:11 PM
சென்னை: நிதித்துறை ஒப்புதல் அளித்தும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்துவதால் 7,360 கவுரவ விரிவுரையாளர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளன.
தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் மற்றும் 2-ம் சுழற்சியில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் தொகுப்பூதியம் வழங்க அந்தந்த கல்லூரியில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர் களின் விவரத்தை கடந்த மே 25-க்குள் அனுப்பி வைக்குமாறு கல்லூரிக் கல்வி ஆணையர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்களுக்கு மே 15 அன்று சுற்றறிக்கை விடுத்தார்.
அதன்படி, கவுரவ விரிவுரையாளர்களின் விவரம் அனுப்பப்பட்டது. அதனைத் தொடர்ந்து மே 7-ம் தேதி முதல் சுழற்சிக்கு 5,699 பேருக்கு மே மாதம் தவிர்த்து 11 மாதங்களுக்கு தொகுப்பூதியம் வழங்க ரூ.156.72 கோடியும், மே 13-ம் தேதி 2-ம் சுழற்சிக்கு 1,661 பேருக்கு ரூ.45.67 கோடியும் கோரி கல்லூரிக் கல்வி ஆணையர் நிதித் துறைக்கு கடிதம் அனுப்பினார். அதற்கான ஒப்புதலை நிதித்துறை முதல் சுழற்சிக்கு மே 30 அன்றும், 2-ம் கழற்சிக்கு ஜுன் 7 அன்றும் வழங்கியது.
அதனையடுத்து ஜூன் 2-ல் முதல் கழற்சியிலும், ஜூன் 9-ல் 2-ம் சுழற்சியிலும் கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண்.129 மற்றும் 140-ல் அவர்களுக்கான சம்பள ஒதுக்கீடும் குறிப்பிடப் பட்டுள்ளது. நிதித்துறை ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு ஒரு மாதமாகியும், கல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல் உயர் கல்வித் துறை காலம் தாழ்த்தி வருகிறது.
இதனால் ஏப்ரல் , ஜூன் மாத ஊதியம் பெற முடியாமல் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் தவிக்கின்றனர். அவர்களின் குடும்பங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. எனவே போர்க்கால அடிப்படையில் ஊதியத்தை வழங்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுரவ விரிவுரையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT