Published : 02 Jul 2025 05:04 AM
Last Updated : 02 Jul 2025 05:04 AM
சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் 100 நாள் சவாலை ஏற்று மாணவர்களின் வாசித்தல், கணிதத்திறனில் முன்னேற்றம் அடையச் செய்த 4,552 அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட உள்ளன. தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கற்றல் திறன் அடைவுகள் குறித்து 100 நாள் சவாலை பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதற்காக முதல்கட்டமாக 4,552 பள்ளிகள் கடந்த நவம்பர் மாதம் அழைப்பு விடுத்தன. இந்த பள்ளிகள் 100 நாள் சவால் என்ற அடிப்படையில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல் பயிற்சி மற்றும் கணிதப் பாடத்தில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் ஆகிய அடிப்படைத் திறன்களை கற்பித்து, பொதுவெளியில் சவாலை நடைமுறைப்படுத்தின.
அப்போது தமிழ், ஆங்கில எழுத்துகளை அடையாளம் காணுதல், வார்த்தைகளை பிழையின்றி வாசித்தல், கணிதத்தில் ஒற்றை, இரட்டை எண்களை கண்டுபிடித்தல், கூட்டல், வகுத்தல் போன்றவை ஆய்வில் மேற்கொள்ளப்பட்டது. ஒரு வகுப்புக்கு 5 மாணவர்கள் வீதம் இந்த கற்றல் அடைவுத் திறன் சோதிக்கப்பட்டது.
இந்த ஆய்வுக்கு 1 முதல் 3 வகுப்புகளில் இருந்து 45,032 மாணவர்கள், 4, 5-ம் வகுப்புகளில் இருந்து 35,866 மாணவர்கள் என மொத்தம் 80,898 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்நிலையில் முதல் சுற்றில் சிறப்பான நிலையை அடைய முயற்சிகள் மேற்கொண்ட பள்ளிகளுக்கு பாராட்டு விழா ஜூலை 6-ம் தேதி திருச்சி தேசிய சட்டக் கல்லூரி வளாகத்தில் மதியம் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் 4,552 பள்ளிகளிலிருந்து தலைமை ஆசிரியர்கள் பங்கேற்பர். அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவிக்கவுள்ளதாக தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT