Published : 27 Jun 2025 11:14 AM
Last Updated : 27 Jun 2025 11:14 AM
சென்னை: பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) காலை வெளியிடப்பட்டது. சென்னை கிண்டியில் உள்ள மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் தரவரிசை பட்டியலை அறிந்துகொள்ளலாம்.
தரவரிசைப் பட்டியலில் 145 பேர் 200-க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களில் 140 பேர் தமிழ்நாடு பாட வாரியத்தின் கீழ் படித்தவர்கள் ஆவர்.
மேலும், கலந்தாய்வு கால அட்டவணையையும் அமைச்சர் வெளியிட்டார். அதன்படி ஜூலை 7 கலந்தாய்வு தொடங்குகிறது. அன்றைய தினம் சிறப்புப் பிரிவினருக்கும், 14-ம் தேதி பொதுப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
ரேண்டம் எண் வெளியானதைத் தொடர்ந்து ஜூன் 28 முதல் ஜூலை 2-ம் தேதி வரை மாணவர்கள் குறை தீர்க்கும் சேவை வழங்கப்படும். தரவரிசை பட்டியலில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழகத்தில் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகள், அரசுக் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் இதில் அடங்கும். இந்தக் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்புகளில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள், அரசு ஒதுக்கீட்டு இடங்களாகும்.
இந்த இடங்களில் நடப்பு கல்வியாண்டில் (2025-2026) சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி, கடந்த 6-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அனைவருக்கும் 10 இலக்க எண்கள் கொண்ட ரேண்டம் எண் கடந்த 11-ம் தேதி ஆன்லைன் வாயிலாக ஒதுக்கீடு செய்யப்பட்டது.
ரேண்டம் எண் ஒதுக்கப்பட்டதை தொடர்ந்து, பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் மாணவர்களின் சான்றிதழ்களை ஆன்லைனில் சரிபார்க்கும் பணி கடந்த 10-ம் தேதி தொடங்கி 20-ம் தேதி முடிவடைந்தது.
இந்நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்கனவே அறிவித்தபடி, பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று (ஜூன் 27) வெளியிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT