Published : 25 Jun 2025 05:53 AM
Last Updated : 25 Jun 2025 05:53 AM
சென்னை: உதவிப் பேராசிரியர் பணிக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நம்நாட்டில் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுக்கு இருமுறை கணினிவழியில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு சில அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு மட்டும் பிரத்யேகமாக நடத்தப்படும்.
அதன்படி நடப்பாண்டுக்கான சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஜூலை 26 முதல் 28-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 3-ல் தொடங்கி 23-ம் தேதியுடன் நிறைவு பெற்றது. தற்போது பல்வேறு தரப்பின் கோரிக்கைகளை ஏற்று இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நாளை (ஜூன் 26) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, விருப்பமுள்ளவர்கள் /csirnet.nta.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் செலுத்த ஜூன் 27-ம் தேதி கடைசி நாளாகும். மேலும், விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய ஜூன் 28, 29-ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்படும்.
இந்த தேர்வானது ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே நடைபெறும். தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு உள்ளிட்ட கூடுதல் விவரங்களை /nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம். விண்ணப்பிப்பதில் ஏதேனும் சிரமம் இருப்பின் மாணவர்கள் 011-40759000/ 69227700 என்ற தொலைபேசி மூலமாக அல்லது csirnet@nta.ac.in எனும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக தொடர்பு கொண்டு உரிய விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT