Published : 16 Jun 2025 04:38 AM
Last Updated : 16 Jun 2025 04:38 AM
சென்னை: பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் சென்னையில் ஜூன் 23, 24-ல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் அரசுப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அவை மாணவர்களுக்கு முழுமையாக சென்றடைவதை உறுதி செய்வதற்காக துறை சார்ந்த ஆய்வுகளை பள்ளிக்கல்வித் துறை செய்துவருகிறது.
அதன்படி பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள் தொடர்பாக துறையின் அமைச்சர் அன்பில் மகேஸ் தலைமையில் ஆய்வுக் கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் ஜூன் 23, 24-ம் தேதிகளில் மாவட்ட வாரியாக நடத்தப்பட உள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 23-ம் தேதி காலையும், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், மதுரை, ஈரோடு, திருச்சி உட்பட 12 மாவட்டங்களுக்கு மதியமும் ஆய்வுக் கூட்டம் நடைபெறும்.
அதேபோல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோவை, கரூர், நாமக்கல், வேலூர், சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு ஜூன் 24-ம் தேதி கூட்டம் நடத்தப்படும். இதுசார்ந்த தகவல்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாவட்டங்களில் பணிபுரியும் முதன்மை மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் திட்ட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டமாக அழைக்கப்பட்டு களநிலவரம் ஆய்வு செய்யப்படவுள்ளது.
மேலும், கூட்டத்தில் மாவட்ட அலுவலர்கள் கலந்து கொள்ளும்போது அந்தந்த மாவட்டத்துக்குரிய கண்காணிப்பு பொறுப்பில் உள்ள துறைஇயக்குநர்களும் பங்கேற்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT