Published : 15 Jun 2025 04:25 PM
Last Updated : 15 Jun 2025 04:25 PM
புதுச்சேரி: நீட் நுழைவுத் தேர்வில் புதுச்சேரி மாணவர்கள் தேர்ச்சி சரிந்துள்ளது. தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 3 சதவீதம் குறைந்துள்ளது.
எம்பிபிஎஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவம் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு மே 4-ம் தேதி நாடு முழுவதும் 5 ஆயிரத்து 453 மையங்களில் நடந்தது. மொத்தம் 22.7 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
புதுவையில் 8 மையங்கள், காரைக்காலில் இரண்டு, மாஹே மற்றும் ஏனாமில் தலா ஒன்று என மொத்தம் 10 மையங்களில் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்த 5 ஆயிரத்து 266 மாணவர்களில் 5 ஆயிரத்து 149 பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். இத்தேர்வின் முடிவு அன்மையில் வெளியானது. அதில், புதுவை மாநிலத்தில் தேர்வு எழுதியவர்களில் 2 ஆயிரத்து 639 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 51.25 ஆகும்.
மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. புதுவை மாநில அளவில் தனியார் பள்ளி மாணவர் பிரசாந்த் முதலிடம் பிடித்துள்ளார். இவர் அகில இந்திய அளவில் 127-வது இடத்தை பிடித்துள்ளார். 2024-ம் ஆண்டு நீட் தேர்வில் புதுவை மாநிலம் 54.34 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு 51.25 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 3.09 சதவீதம் குறைந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT