Published : 15 Jun 2025 12:32 AM
Last Updated : 15 Jun 2025 12:32 AM

பாளையங்கோட்டை பள்ளி மாணவர் நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை

நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற பாளையங்கோட்டை புஷ்ப லதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணனுக்கு, பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன் பரிசு வழங்கிப் பாராட்டினார். படம்: மு.லெட்சுமி அருண்

தேசிய தேர்வுகள் முகமை நடத்திய இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில், பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரிய நாராயணன் 665 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.

நடப்பாண்டு நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வை 22 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், பாளையங்கோட்டை புஷ்பலதா வித்யா மந்திர் பள்ளி மாணவர் சூரியநாராயணன் 720-க்கு 665 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் 27-வது இடத்தையும் பெற்றுள்ளார். இந்த மாணவர் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 495 மதிப்பெண்களை பெற்றிருந்தார். மேலும், ஜேஇஇ முதன்மை மற்றும் அட்வான்ஸ் தேர்வுகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.

இதேபோல, இப்பள்ளி மாணவர் பிரணவ் நீட் தேர்வில் 633 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 191-வது இடத்தையும், மாணவர் அவனிஷ் பிரபாகர் 608 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் 922-வது இடத்தையும் பெற்றுள்ளனர். நீட் நுழைவு தேர்வில் சிறப்பிடம் பெற்றுள்ள மாணவர்களை பள்ளித் தாளாளர் புஷ்பலதா பூரணன், முதன்மை முதல்வர் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x