Published : 12 Jun 2025 06:20 AM
Last Updated : 12 Jun 2025 06:20 AM
சென்னை: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நேரடி நியமனம், பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை தகுதியான நபர்களை கொண்டு தற்காலிக அடிப்படையில் நிரப்ப அனுமதி வழங்கப்பட்டது.
அந்த வகையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக நியமிக்கப்படவுள்ள இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12 ஆயிரம், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி , 2024-25ம் கல்வியாண்டில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் கடந்த மார்ச் வரை மதிப்பூதியம் பெறும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டது. அதேபோல், 2025-26-ம் கல்வியாண்டில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் வழங்கும் வகையில் ரூ.93.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாத மதிப்பூதியம் வழங்க நிதி ஒதுக்கீடுமாறு பல்வேறு மாவட்டக் கல்வி அலுவலர்களிடம் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன.
இதையடுத்து, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரை (மே தவிர்த்து) 3 மாதங்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்காக ரூ.27.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் மதிப்பூதிய தொகையை, தொடர்புடைய மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்களின் ஆளுகைக்கு உட்பட்ட வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT