Published : 12 Jun 2025 05:59 AM
Last Updated : 12 Jun 2025 05:59 AM
சென்னை: சிவில் சர்வீஸ் முதல்நிலை தேர்வில் நாடு முழுவதும் 14,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நம்நாட்டில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். அதன்படி நடப்பாண்டு 979 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜன. 22-ம் தேதி யுபிஎஸ்சி வெளியிட்டது. இதில் முதல்நிலைத் தேர்வெழுத நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
16 நாட்களில் முடிவு அறிவிப்பு: இந்நிலையில் முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 79 நகரங்களில் கடந்த மே 25-ம்தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 6 லட்சம் பேர் வரை எழுதியதாக தெரிகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை உட்பட 5 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வை 24 ஆயிரம் பேர் வரை எழுதியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் முதல்நிலைத் தேர்வு முடிவுகளை வெறும் 16 நாட்களில் யுபிஎஸ்சி நேற்று வெளியிட்டது.
அதன் விவரங்களை தேர்வர்கள் www.upsc.gov.in, www.upsconline.nic.in ல் சென்று அறிந்து கொள்ளலாம். முதல்நிலை தேர்வில் 14,156 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் மட்டும் 723 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு ஆகஸ்டில் நடை பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT