Published : 10 Jun 2025 12:40 AM
Last Updated : 10 Jun 2025 12:40 AM

பாலிடெக்னிக் மாணவர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு: அமைச்சர் கோவி.செழியன் அறிவிப்பு

சென்னை: கடைசி செமஸ்டர் தேர்வு மற்றும் துணை தேர்வில் அரியர் வைத்துள்ள பாலிடெக்னிக் மாணவர்களுக்கு ஜூன், ஜூலையில் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற பாலிடெக்னிக் டிப்ளமா தேர்வில் இறுதி செமஸ்டர் மற்றும் துணை தேர்வை எழுதிய மாணவர்கள் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் அரியர் வைத்துள்ளனர். அம்மாணவர்கள் உயர்கல்வி பயிலவும் வேலைவாய்ப்புக்கு செல்ல முடியாமல் இருக்கும் சூழ்நிலையை கருத்தில்கொண்டும் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளித்து ஜூன், ஜூலையில் ஒரு சிறப்பு துணை தேர்வு நடத்துவதன் மூலம் அரியர் பாடங்களை எழுத வாய்ப்பு வழங்குமாறு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

முதல்வரின் அறிவுரையின் பேரில், அம்மாணவர்களுக்கு தற்போது மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதற்காக ஜூன், ஜூலையில் சிறப்பு துணை தேர்வு நடத்தப்படும். இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 18-ம் தேதி (புதன்கிழமை) தொடங்கி 23-ம் தேதி முடிவடையும். தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஜூன் 25-ம் தேதி பதிவேற்றம் செய்யப்படும். பாடத்தேர்வு ஜூன் 30 முதல் ஜூலை 16 வரை நடைபெறும். செய்முறைத்தேர்வுகள் ஜூலை 17 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும். தேர்வு முடிவுகள் ஜூலை 30-ம் தேதி வெளியிடப்படும்.

சிறப்பு துணைத்தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் ரூ.30. தேர்வு கட்டணம் (ஒரு பாடத்துக்கு) ரூ.65. அரியர் வைத்துள்ள மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x