Published : 07 Jun 2025 04:42 AM
Last Updated : 07 Jun 2025 04:42 AM

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியது

கோப்புப்படம்

சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடங்கியுள்ளது. மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் சென்னை கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவ கல்லூரியில் 5,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 15 சதவீத இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கியதுபோக, 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன.

இதுதவிர, தனியார் கல்லூரிகளில் 3,450 இடங்கள், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்கள் எம்பிபிஎஸ் படிப்புகளுக்கு உள்ளன. இதில், அரசு ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 50 சதவீதம் வழங்கப்படும். மொத்தமாக அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 9,200 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 496 இடங்கள் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல, 3 அரசு பல் மருத்துவ கல்லூரிகளில் உள்ள 250 பிடிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 15 சதவீத இடங்கள் வழங்கியதுபோக, 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளன. தனியார் கல்லூரிகளில் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 1,900 இடங்கள் உள்ளன. அதில், 126 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது.

புதிய எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு தேசிய மருத்துவ ஆணையத்திடம் தமிழக சுகாதார துறை விண்ணப்பிக்கவில்லை. அதனால், கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தமிழகத்தில் உள்ள 11,350 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இந்நிலையில், 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக்கு https://tnmedicalselection.net என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. வழக்கமாக, நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் விண்ணப்பங்கள் வரவேற்கப்படும். முதல்முறையாக, மாணவர்களின் வசதி கருதி முன்கூட்டியே தொடங்கியுள்ளது. ‘நீட் தேர்வு மதிப்பெண் இல்லாமல் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முடிவு வெளியான பிறகு, தேசிய தேர்வு முகமையிடம் இருந்து மதிப்பெண்களை மாநில மருத்துவ கல்வி இயக்ககம் பெற்றுக் கொள்ளும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால், மாணவ, மாணவிகள் ஆன்லைனில் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். தகவல் தொகுப்பேடு மற்றும் விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி 5 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

போலி சான்றிதழ் - கடும் நடவடிக்கை: மதிப்பெண் சான்றிதழ் மாற்று சான்றிதழ் (டி.சி.), வெளிநாடு வாழ் இந்தியர் ஆதாரச் சான்று உட்பட அனைத்து ஆவணங்களும் பதிவேற்றுதல் செய்ய வேண்டும். கடந்த ஆண்டு போலியாக வெளிநாடு வாழ் இந்தியர் சான்றிதழ்களை சமர்ப்பித்து சிலர் இடங்களை பெற்றது கண்டறியப்பட்டு, அவர்களது மாணவர் சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.

அதனால், நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை தகவல் கையேட்டில் இதுதொடர்பாக அறிவுறுத்தப் பட்டுள்ளது. போலி சான்றிதழ் அளித்திருப்பது கண்டறியப்பட்டால், மாணவரின் சேர்க்கை உடனடியாக ரத்து செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்கு வேறு எந்த படிப்பிலும் சேர முடியாது.

நிரந்தரமாக மருத்துவ படிப்புகளில் சேர முடியாது. விண்ணப்பதாரர் மற்றும் அவரது பெற்றோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் காவல்துறையிடம் ஒப்படைக்கப்படுவர் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x