Published : 05 Jun 2025 03:50 PM
Last Updated : 05 Jun 2025 03:50 PM
சென்னை: பொறியியல் பாடத்தில் டிப்ளமா படித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகள் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நாளை (ஜூன் 6) தொடங்குகிறது.
இது தொடர்பாக தொழில்நுட்பக்கல்வி ஆணையர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: பொறியியலில் டிப்ளமா முடித்தவர்கள், பிஎஸ்சி பட்டதாரிகள் (கணிதத்தை குறைந்தபட்சம் துணை பாடமாக படித்திருக்க வேண்டும்) ‘லேட்ரல் என்ட்ரி’ முறையில் பிஇ, பிடெக் படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேரலாம். அதன்படி நடப்பு கல்வி ஆண்டில் (2025-2026) பொறியியல் பட்டப்படிப்பில் நேரடியாக 2-ம் ஆண்டு சேருவதற்கு டிப்ளமா முடித்தவர்கள் மற்றும் பிஎஸ்சி பட்டதாரிகளிடமிருந்து ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 6-ம் தேதி தொடங்குகிறது. மாணவர்கள் www.tnlea.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பித்து தேவையான சான்றிதழ்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.500. எஸ்சி எஸ்டி பிரிவினராக இருந்தால் ரூ.250. பதிவுக்கட்டணத்தை விண்ணப்பிக்கும்போதே ஆன்லைனில் செலுத்திவிடலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி இல்லாத மாணவர்கள் தமிழ்நாடு பொறியியல் சேவை மையத்தை (TFC) பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களை இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT