Published : 03 Jun 2025 05:00 AM
Last Updated : 03 Jun 2025 05:00 AM
சென்னை: நாடுமுழுவதும் எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளாமோ படிப்புகளுக்கு 2025-26-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த நீட் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது கடந்த ஏப். 13-ம் தேதி தொடங்கி கடந்த மே 7-ம் தேதி நிறைவடைந்தது. தமிழகத்தில் 25 ஆயிரம் பேர் உட்பட நாடுமுழுவதும் 2.30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, திருப்பூர் என 17 இடங்கள் உட்பட நாடுமுழுவதும் 179 நகரங்களில் ஜூன் 15-ம் தேதி இரு கட்டங்களாக நீட் தேர்வு நடைபெறும். இருதரப்பினருக்கும் மாறுபட்ட வினாத்தாள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையில், நீட் தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், நேற்று தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒரே ஷிப்டில் நடத்தப்படும். இதற்காக கூடுதல் தேர்வு மையங்கள், தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியுள்ளதால், ஜூன் 15-ம் தேதி நடைபெற இருந்த தேர்வு தள்ளிவைக்கப்படுகிறது. நீட் தேர்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT