Published : 02 Jun 2025 12:23 AM
Last Updated : 02 Jun 2025 12:23 AM
முதல்வரின் காலை உணவு திட்டத்தில் திங்கள்தோறும் உப்புமாவுக்கு பதிலாக பொங்கல் - சாம்பார் வழங்கப்படும் என்ற பேரவை அறிவிப்பை நடைமுறைப்படுத்துமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நல துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர், நகராட்சி நிர்வாக இயக்குநர் உள்ளிட்டோருக்கு சமூகநல துறை ஆணையர் ஆர்.லில்லி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் திங்கள்கிழமை வழங்கப்படும் உணவு வகைகளில், காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா போன்ற சிற்றுண்டி வகைகளில் ஏதேனும் ஒன்றை சேர்த்து வழங்க வேண்டும் என சமூகநல துறை கடந்த 2023 ஜூன் மாதம் அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தில் மாற்றம் செய்து கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ‘விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும்போது, காலை உணவு திட்டத்தில் அரிசி உப்புமாவுக்கு பதிலாக, பொங்கல், சாம்பார் வழங்கப்படும்’ என்று சமூக நல துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்தார்.
இதையடுத்து, அத்திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களின் பரிந்துரைகளையும், குழந்தைகளின் விருப்பங்களையும் கருத்தில் கொண்டு, முதல்வரின் காலை உணவு திட்டத்தின்கீழ் வாரம்தோறும் திங்கள்கிழமைகளில் வழங்கப்படும் அரிசி உப்புமா அல்லது ரவா உப்புமாவுக்கு பதிலாக, பொங்கல் - காய்கறி சாம்பார் வழங்க சமூக நல துறை கடந்த மே 29-ம் தேதி அரசாணை வெளியிட்டு உத்தரவிட்டது.
எனவே, இதை பின்பற்றி காலை உணவு வழங்குமாறு, காலை உணவு திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் மற்றும் சமையல் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாற்றம் செய்யப்பட்ட உணவு வகையை காலை உணவு திட்ட செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT