Published : 31 May 2025 12:55 AM
Last Updated : 31 May 2025 12:55 AM
கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறும் வகையில், இந்த கல்வி ஆண்டில் மேலும் 4 புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களால் தமிழகத்தில் மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, உயர்கல்வி துறை சார்பில் சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, குன்னூர், நத்தம், மானாமதுரை, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் கடந்த 26-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த கல்வி ஆண்டு முதலே இக்கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து வந்துள்ள கோரிக்கைகளின் அடிப்படையில், கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி துறை சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி - துறையூர், கள்ளக்குறிச்சி - உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை - செங்கம் ஆகிய 4 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த கல்லூரிகளும் இந்த 2025-26 கல்வி ஆண்டிலேயே செயல்படும். இதன்மூலம் 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT