Published : 30 May 2025 12:31 AM
Last Updated : 30 May 2025 12:31 AM

​ராகிங் தடுப்பு செயல் திட்டங்களை சமர்ப்பிக்க கல்லூரிகளுக்கு யுஜிசி அறிவுறுத்தல்

ராகிங் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட செயல் திட்டங்கள், கண்காணிப்பு பணிகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து விதமான உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ராகிங்கை தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கெனவே வகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. அதில் சட்ட வழிகாட்டு குழுவின் ஆதரவைப் பெறுதல், கல்வி நிறுவனங்களின் பொறுப்புணர்வு, திடீர் ஆய்வுகள் குறித்த பல்வேறு நெறிமுறைகள் இடம்பெற்றுள்ளன. அவற்றை முழுமையாக பின்பற்றி கல்லூரிகள், விடுதிகளில் ராகிங் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும்.

இதற்கான நியமிக்கப்பட்ட பேராசிரியர் குழுவினர் கல்லூரி வளாகங்களில் கண்காணிப்பு பணிகளை தொடர்ச்சியாக மேற்கொண்டு மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் . அதேநேரம் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துதல் போன்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும். மாணவர்கள் மத்தியில் ராகிங் எதிர்வினைகள் குறித்து போதியளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

இந்த விவகாரத்தில் உயர்கல்வி நிறுவனங்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது அவசியம். ஒட்டுமொத்தமாக ராகிங் தொடர்பாக எந்தவொரு மாணவரும் பாதிக்கப்படாதவாறு அதுகுறித்த கட்டுப்பாடுகளை வலுப்படுத்த வேண்டும். மேலும், ராகிங் தொடர்பாக மாணவர்களிடம் பெறப்படும் புகார்கள், அதுகுறித்து ஆய்வு செய்வது, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x