Published : 29 May 2025 05:57 AM
Last Updated : 29 May 2025 05:57 AM
சென்னை: சென்னையில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகையுடன் ஒருங்கிணைந்த எம்.ஏ தமிழ் 5 ஆண்டு பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஜூன் 27-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் 5 ஆண்டுகால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை பட்டப் படிப்பு (Integrated M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இந்த பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது. இதில் 2025-26-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் சேரலாம்.
இதற்கான விண்ணப்ப படிவம், வழிகாட்டி கையேட்டை www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது, நேரிலும் பெறலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன், ‘இயக்குநர், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், 2-வது முதன்மை சாலை, மைய தொழில்நுட்ப பயிலக வளாகம், தரமணி, சென்ன 600113’ என்ற முகவரியில் ஜூன் மாதம் 27-ம் தேதிக்குள் நேரிலோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.
ரூ.2 ஆயிரம் உதவித் தொகை: இப்படிப்பில் சேரும் மாணவர்களில், தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே இலவச விடுதி உள்ளது. இதுகுறித்து கூடுதல் விவரங்கள் அறிய 044-22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட இணையதளத்திலும் விரிவாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT