Published : 27 May 2025 05:20 PM
Last Updated : 27 May 2025 05:20 PM
சென்னை: இளைஞர்களை தொழில்முனைவோராக மாற்றும் புதிய சான்றிதழ் படிப்பை தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஓராண்டு கால படிப்பில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்.
தமிழக அரசின் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் இயங்கி வருகிறது. இங்கு தொழில்முனைவு தொடர்பான பல்வேறு குறுகிய கால பயிற்சிகள் குறைந்த கட்டணத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிறுவனம் அகமதாபாத் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனத்துடன் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான புதிய சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குநர் ஆர்.அம்பலவாணன் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இந்த ஓராண்டு கால சான்றிதழ் பயிற்சியில் பட்டதாரிகள், டிப்ளமா முடித்தவர்கள் சேரலாம். மொத்தம் 2 செமஸ்டர்கள். தொழில்முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கு இது அருமையான படிப்பு. வயது 21 முதல் 40-க்குள் இருக்க வேண்டும். மொத்தம் 50 இடங்கள் உள்ளன. பயிற்சி கட்டணம் ரூ.80 ஆயிரம். இதற்கு பாரத ஸ்டேட் வங்கியில் கல்விக்கடன் பெற ஏற்பாடு செய்யப்படும்.
தொழில்நிறுவனங்களின் நிதியுதவி, சிஎஸ்ஆர் நிதி போன்றவற்றின் மூலம் படிப்பு கட்டணத்தை செலுத்தலாம். இன்றைய சூழலுக்கு ஏற்ற பாடத்திட்டம், நவீன வசதிகளுடன் கூடிய நூலகம், அனுபவம் வாய்ந்த பயிற்றுனர்கள், ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை, கள அனுபவம் உள்ளிட்டவை இப்படிப்பின் சிறப்பு அம்சங்கள் ஆகும். மாணவர்கள் மாணவர்கள் பல்வேறு மாநில அரசு நிறுவனங்களுக்கு சென்று தொழில்முனைவோருக்கு தேவையான வணிக திறன்களையும் அறிவையும் வளர்த்துக்கொள்ள முடியும்.
தயாரிப்பு யோசனையில் இருந்து வணிக பொருட்களை உற்பத்தியை மேற்கொள்வதற்கான தமிழக அரசு வழங்கும் ரூ.3 லட்சம் (வவுச்சர் - ஏ திட்டம்) மற்றும் ரூ.7 லட்சம் (வவுச்சர் பி திட்டம்) பெறுவதற்கு விண்ணப்பிக்கவும் ஏற்பாடு செய்யப்படும். அதோடு மாணவர்கள் டிஎன்சீட் நிதிக்கு விண்ணப்பிக்கவும் தேவையான உதவிகள் செய்துதரப்படும். மாணவர்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிக்கவும் ஆலோசனை வழங்கப்புடும்.
இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த இந்த படிப்பில் சேர விரும்பும் இளைஞர்கள் https://editn.in/web-one-year-Registration என்ற இணையதள இணைப்பை பயன்படுத்தி ஜூலை 15-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இப்படிப்பு ஜூலை மாதத்திலேயே தொடங்கப்படும். வெளியூர் இளைஞர்களுக்கு விடுதி வசதி இருக்கிறது. கூடுதல் விவரங்களை www.editn.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். அதோடு 8668101638, 8668107552 ஆகிய எண்களிலும் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT