Published : 27 May 2025 09:22 AM
Last Updated : 27 May 2025 09:22 AM
கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் நிலையில் அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை: 2025-26ஆம் கல்வியாண்டில் 1 முதல் 12 வகுப்புகளுக்கு ஜுன் 2-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, பள்ளி துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகளில் கீழ்க்காணும் நடைமுறைகளையும் பின்பற்றுமாறு தலைமையாசிரியர்கள் / அனைத்து வகை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
*உடற்கல்வி ஆசிரியர்கள் பள்ளி வேலை நேரத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வருகை புரிதல் வேண்டும். உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் வருகை, ஒழுக்கம், சீருடை ஆகியவற்றை நெறிப்படுத்திட வேண்டும்.
*ஒவ்வொரு வகுப்பிற்கும் வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. உடற்கல்வி ஆசிரியர்கள் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்கள் அனைவரையும் இப்பாடவேளைகளில் விளையாட வைக்க வேண்டும்.
*வாரத்தில் ஒருநாளில் பள்ளி நேரம் முடிந்தவுடன் அனைத்து மாணவர்களுக்கும் கூட்டு உடற்பயிற்சி ஏற்பாடு செய்ய வேண்டும். மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளில் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை, 9ஆம் வகுப்பு மற்றும் 10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தனித்தனியே கூட்டு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும்.
*தலைமை ஆசிரியர், உதவித் தலைமையாசிரியர் முன்னிலையில் காலை வணக்கக் கூட்டம் நடைபெறுதல் வேண்டும். காலை வணக்கக் கூட்டத்தில் மாணவர்களைத் தவறாமல் கலந்து கொள்ளச் செய்ய வேண்டும்.
*ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமை அன்று காலை வணக்கக் கூட்டத்தில் 6 முதல் 12 வகுப்பு உள்ள பள்ளிகளில் போதை எதிர்ப்பு சார்ந்த தகவல்கள்/கருத்து பரிமாற்றம் சார்ந்து பேச்சு/கவிதை/ சுவரொட்டி /நாடகம்/பாட்டு/ திருக்குறள் கதைகள் இடம்பெறலாம்.
*முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் அனைத்துக் குழந்தைகளுக்கும் குறித்த நேரத்திலும் தரமானதாகவும் வழங்குவதை உறுதி செய்தல் வேண்டும்.
*மதிய உணவு இடைவேளை முடிந்த பின்பு 20 நிமிடம் ஐந்தாம் பாடவேளை ஆசிரியர்கள் வாயிலாக மாணவர்கள் சிறார் பருவ இதழ், செய்தித்தாள். பள்ளி நூலகத்தில் உள்ள நூல்கள் போன்றவற்றை வாசிக்கச் செய்ய வேண்டும்.
*நன்னெறி வகுப்பு வாரத்திற்கு ஒரு பாடவேளை என ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாட வேளைக்கு சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியர் பொறுப்பேற்று மாணவர்களின் மனநலன் சார்ந்து தகுந்த ஆலோசனை வழங்கவேண்டும்.
*வாரத்திற்கு ஓர் பாடவேளை நூலகச் செயல்பாடுகளுக்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பாடவேளையின்போது பள்ளியில் உள்ள நூலகப் புத்தகங்களை மாணவர்களுக்குப் பிரித்து வழங்கி அவர்கள் படித்து தெளிந்தவற்றை சார்ந்த குறிப்புகளை பாட குறிப்பேடுகளில் எழுத செய்யலாம்.
*ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மூலம் வழங்கப்பட்டிருக்கும் புத்தகங்களை இப்பாடவேளையில் மாணவர்கள் படித்தலுக்கும் ஆசிரியர்களால் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
*பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடத்திட தெரிவிக்கப்படும் நாட்கள் மற்றும் தேவையான நாட்களில் உரிய அறிவுரைகளைப் பின்பற்றி நடத்திட வேண்டும். அதே நாளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்திற்கு முன்பு அந்தந்த வகுப்புகளில் பெற்றோர் கூட்டம் நடத்தப் பெற வேண்டும்.
*இக்கூட்டத்தில் ஆசிரியர், பெற்றோரிடம் அவர்தம் குழந்தைகளின் வருகை, கற்றல் நிலை, உடல் நலம், மனநலம், கல்வி இணை செயல்பாடுகள், கல்விசாரா செயல்பாடுகள் என பள்ளியின் அனைத்து நடவடிக்கைகளையும் விவாதிப்பதுடன் ஒவ்வொரு நாளும் வீட்டில் மாணவரின் கற்றல் சார்ந்து பெற்றோர் செய்ய வேண்டிய பணிகளையும் எடுத்துக் கூற வேண்டும். மேலும் பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் குறித்தும் அதனை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
இச்செயல்முறைகளை அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பிட தக்க நடவடிக்கை எடுக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT