Published : 27 May 2025 04:09 AM
Last Updated : 27 May 2025 04:09 AM

நேர்காணல் இல்லாத தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு: இன்று முதல் விண்ணப்பிக்க டிஎன்பிஎஸ்சி அழைப்பு

சென்னை: தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கு (நேர்காணல் இல்லாத பதவிகள்) இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி மே 21-ம் தேதி அன்று வெளியிட்டது. இதில் உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 27-ம் தேதி தொடங்கி ஜூன் 25-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்0 ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப கலை அறிவியல் பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10-ம் தேதி வரை கணினிவழியிலும், ஓஎம்ஆர் ஷீட் வடிவிலும் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, பதவிகள் வாரியான காலியிடங்கள், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x