Published : 26 May 2025 04:40 AM
Last Updated : 26 May 2025 04:40 AM
சென்னை: ஐஏஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு வினாத்தாளில் பெரியார் குறித்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன.
இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும். இதில் பட்டதாரிகள் பெறும் மதிப்பெண்கள் வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும். அதன்படி நடப்பாண்டு 979 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை யுபிஎஸ்சி கடந்த ஜனவரி 22-ம் தேதி வெளியிட்டது.
இதில் முதல்நிலைத் தேர்வெழுத நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் 79 நகரங்களில் நேற்று நடைபெற்றது.
இந்த தேர்வை சுமார் 6 லட்சம் பேர் வரை எழுதியதாக கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் சென்னை உட்பட 5 நகரங்களில் நடத்தப்பட்ட தேர்வை 24 ஆயிரம் பேர் வரை எழுதியதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சென்னை எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது.
காலை முதல்தாள் தேர்வும் (பொது அறிவு), மதியம் 2-ம் தாள் (திறனறிவு) தேர்வும் நடைபெற்றது. தேர்வு மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. பலத்த பரிசோதனைக்கு பின்னரே தேர்வறைக்குள் பட்டதாரிகள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வை பொறுத்தவரை வினாத்தாள்கள் சற்று எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
மேலும், முதல்நிலைத் தேர்வு முடிவுகள் இருவாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்தகட்டமாக முதன்மைத் தேர்வு செப்டம்பரில் நடத்தப்படும். இதற்கிடையே சிவில் சர்வீஸ் தேர்வு மையங்களில் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் வழிகாட்டுதல்கள் தயாரிக்கப்பட்டு விளம்பரப் பலகையில் பார்வைக்கு ஒட்டப்பட்டிருக்கும்.
இதை படித்துவிட்டு பட்டதாரிகள் தேர்வு எழுத செல்வார்கள். ஆனால், சென்னை மண்ணடி தேர்வு மையத்தில் இந்தி மொழியில் மட்டுமே வழிகாட்டுதல்கள் ஒட்டப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தேர்வர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருந்த வழிகாட்டுதல்களை மையத்தின் ஒரே இடத்தில் ஒட்டாமல் வெவ்வேறு பகுதிகளில் ஒட்டியதால் இந்த குழப்பம் வந்துவிட்டதாக அதிகாரிகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது.
அதேபோல், காலையில் நடைபெற்ற பொது அறிவு பாடத்துக்கான தேர்வு வினாத்தாளின் 78-வது கேள்வியில், ‘சுயமரியாதை இயக்கத்தை தொடங்கியவர் யார்?' என கேட்கப்பட்டிருந்தது. அதன் கீழ் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் பெரியார் ஈ.வெ.ராமசாமி நாயக்கர், பி.ஆர்.அம்பேத்கர், பாஸ்கர் ராவ் ஜாதவ், தினகர் ராவ் ஜவால்கர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.
1929-ம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் தனது பெயருக்கு பின்னுள்ள சாதி பெயரை நீக்குவதாக பெரியார் அறிவித்திருந்தார். சாதி ஒழிப்புக்காக போராடிய அவரின் பெயருக்கு பின்னால் சாதி பெயர் குறிப்பிட்டு யுபிஎஸ்சி வினாத்தாளில் கேள்வி கேட்கப்பட்ட விவகாரம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT