Published : 17 May 2025 04:34 PM
Last Updated : 17 May 2025 04:34 PM
கல்வி வேட்கையுடன் பிஹாரில் இருந்து புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்துக்கு வேடந்தாங்கல் போல் வாசல் திறந்து வாழ்க்கையையும் வழங்கியுள்ளது தமிழகம். 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் ஜியா குமாரியின் மதிப்பெண்ணும், வெற்றியும் வழக்கமான மதிப்பெண் பட்டியல்களோடு கடந்துவிடாமல் பெரிதினும் பெரிதாகப் பேசப் பட வேண்டியதாக இருக்கிறது. அதன் பின்னணியில் பல சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வு இருக்கிறது என்பதால்.
யார் இந்த ஜியா குமாரி? - சென்னை சென்ட்ரலுக்கு அன்றாடம் வரும் நூற்றுக்கணக்கான ரயில்கள் ஆயிரக்கணக்கில் புலம்பெயர் தொழிலாளிகளையும் சுமந்துகொண்டுதான் வருகிறது. அப்படி, சுமார் 17 வருடங்களுக்கு முன்னர் தனஞ்சய் திவாரி என்பவர் பிஹாரில் இருந்து பிழைப்புக்காக சென்னை வந்துள்ளார். அவருக்கு திருமணமாகி இப்போது ரியா குமாரி, ஜியா குமாரி, சுப்ரியா குமாரி என்று 3 மகள்கள் உள்ளனர். இவர்களில் ரியா 12-ம் வகுப்பு படிக்கிறார், சுப்ரியா குமாரி 9-ம் வகுப்பு படிக்கிறார். நம் செய்தியின் நாயகி ஜியா குமாரி தான் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகளால் கவனம் ஈர்த்துள்ளார்.
ஊடகங்களில் அவர் பேட்டி படுவைரலாகி வருகிறது. ஊடகப் பேட்டிகளில் ஜியா குமாரி அப்படி என்ன தான் கூறினார் என்பதைவிட அழகுத் தமிழில் அவர் பேசியது இன்னும் சிறப்பு. ஜியா தமிழில் 93 மதிப்பெண்கள் எடுத்துள்ளார். வெகு சரளமாக தமிழில் பேசுகிறார், இடையிடையே விழும் ஆங்கிலச் சொற்களும் அரசுப் பள்ளியில் பயின்றால் ஆங்கிலம் வராது என்ற கட்டுக்கதைகளுக்கு முற்றுப்புள்ளி. ஜியா குமாரி, கவுல் பஜார் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் தான் படித்து சாதனை புரிந்துள்ளார்.
இனி அவரின் பேட்டியிலிருந்து... “நாங்க இங்க 17 வருடங்களுக்கு முன்னர் வந்தோம். அப்பா வேலைவாய்ப்பு, கல்விக்காக இங்கே வந்தார். அவர் வெல்டிங் வேலை பார்க்கிறார். அம்மா மெடிக்கல் ஷாப்பில் வேலை பார்க்கிறார். நாங்கள் பேசும் மொழியைவிட தமிழ் கடினம் தான். நான் ஆரம்பத்தில் தமிழில் பேச, எழுத சிரமப்பட்டேன். ஆனால் என் பள்ளி ஆசிரியைகள் என் மீது எவ்வித ‘டிஸ்க்ரிமினேஷனும்’ (பாகுபாடும்) காட்டவில்லை. என்னை சமமாக நடத்தி எனக்கு உதவி செய்தார்கள்.
ஆரம்பத்தில் தமிழில் நிறைய ‘ஸ்பெல்லிங் மிஸ்டேக்’ (எழுத்துப் பிழைகள்) வந்தன. ஆசிரியர்கள் தான் பிழையில்லாமல் எழுத பழக்கிக் கொடுத்தனர். அதனால் முதலில் கடினமாக இருந்த தமிழ் அப்புறம் எளிதாகிவிட்டது. நாங்க எல்லோரும் நன்றாக தமிழ் பேசுகிறோம். அப்பாவுக்கு மட்டும்தான் இன்னும் தமிழ் சரியாக வராது.
பிஹாரில் கல்வி, வேலைவாய்ப்பு தமிழகத்தோடு ‘கம்பேர்’ (ஒப்பிடும்போது) பண்ணும்போது ரொம்பவே குறைவு. அதனால்தான் நாங்கள் ‘மைக்ரேட்’ (புலம் பெயர்ந்தோம்) ஆனோம். இங்கே ‘லிட்ரஸி ரேட்’ (கல்வியறிவு) அதிகம். கல்விக்காக இன்னும் நிறைய பேர் பிஹாரில் இருந்து இங்கே ‘மைக்ரேட்’ ஆகணும்.
இங்கே பள்ளியில் ‘மிட் டே மீல்ஸ் ஸ்கீம்’ (மதிய உணவுத் திட்டம்), அப்புறம் ஸ்கூல் பேக், ஷூஸ் கொடுப்பது என்று பல நல்ல திட்டங்கள் உதவியாக இருக்குது. ‘நான் முதல்வன்’ திட்டம் அதிலும் குறிப்பாக சிஜி (Career Guidance) திட்டம் தான், 10-ம் வகுப்புக்குப் பின்னர் என்ன படிக்கலாம்னு எனக்கு ‘ஐடியா’ கொடுத்தது.
நான் 11-ம் வகுப்பில் பயோ-மேத்ஸ் க்ரூப் எடுத்து, நீட் எழுதி, டாக்டராக விரும்புகிறேன். ‘நாம இங்கிருந்துதான் ஏதாவது ஆகவேண்டும். அதாவது க்ரேஜுவேட் ஆக வேண்டும். டாக்டராகித்தான் ஊருக்குப் போக வேண்டும்’னு அப்பா சொல்லியிருக்காங்க” என்றார்.
ஜியா குமாரியின் துடிப்புமிக்க பேச்சு, அவரின் நம்பிக்கை வியப்பை ஏற்படுத்தியது. அவர் பேட்டி வைரலாவது நியாயம்தான். ஜியா குமாரியின் தமிழ் அறிவை அவரது பள்ளி ஆசிரியைகளும் மெச்சுகின்றனர். அவர், தமிழில் 93, ஆங்கிலத்தில் 99, கணிதத்தில் 89, அறிவியலில் 89, சமூக அறிவியலில் 99 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவர் பெற்ற மொத்த மதிப்பெண் 500-க்கு 467.
ஜியா குமாரி மட்டுமல்ல, அவரது மூத்த சகோதரி ரியா குமாரியும் கூட கல்வியில் கெட்டிதானாம். ரியா மேத்ஸ், கணினி அறிவியல் பாடங்களைக் கொண்ட க்ரூப் எடுத்து 12-ம் வகுப்பு படிக்கிறார். அவருக்கு ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்று லட்சியம் இருக்கிறதாம்.
‘இனி இந்த வேலை என்னோடு போகும்’ - புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இங்கே குவிவதால் நம்முடைய வேலைவாய்ப்பு பறிபோகிறது, அவர்கள் குறைந்த கூலிக்கு வேலை செய்து நமது வாய்ப்பை பறித்துக் கொள்கின்றனர் என்ற ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் காணலாம். கிண்டல், கேலி, மீம் என்றல்லாது சில நேரங்களில் அவை எல்லை மீறி துவேசங்களாகக் கூட மாறும். ஆனால், வருவோர் எல்லாம் வெறும் பிழைப்புக்காக மட்டுமல்ல, அடுத்த தலைமுறையாவது நன்றாக வாழட்டும் என்ற எதிர்பார்ப்போடும் வருகிறார்கள் என்பதற்கு சாட்சியாக ஜியா குமாரியின் தந்தை தனஞ்சய் திவாரி இருக்கிறார். அவருக்கு இன்னும் தமிழ் சரளமாக வரவில்லை. ஆனால், ஜியாவின் சாதனை, மகள்களின் கல்வி வளர்ச்சியால் பூரிப்பில் இருக்கிறார்.
“எனது மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. என் குடும்பத்தில் கட்டுமானப் பணி செய்யும் கடைசி நபராக நான் இருப்பேன். எனது மூன்று மகள்களும் தொழில்முறை படிப்புகளைப் படித்து வளர வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று ஒரு பேட்டியில் தனஞ்சய் திவாரி கூறியுள்ளார்.
எத்தனை ஆழமான வார்த்தைகள்! கல்வி மட்டுமே நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ அதைவிட மேம்பட்ட வாழ்க்கையைத் தரும் என்று மாணவர்கள் அனைவருக்கும், குறிப்பாக எல்லா வசதிகளும் இருந்தும் மெத்தனமாக இருக்கும் மாணவர்களுக்கு முகத்தில் அறைந்தார் போல் சொல்லியிருக்கிறார் தனஞ்சய் திவாரி.
சமூக வலைதளங்களில் தனஞ்சய்க்கும் அவரது மூன்று மகள்களுக்கும் குவியும் வாழ்த்துகளோடு நமது வாழ்த்தையும் சேர்த்துக் கொள்வோம்.
முதல்வர் பெருமிதம்: ஜியா குமாரியின் வீடியோ வைரலாகிவரும் நிலையில், அதனை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாடு - எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT