Published : 15 May 2025 04:36 PM
Last Updated : 15 May 2025 04:36 PM
சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்கள் ஒருங்கிணைந்த 5 ஆண்டு கால எம்.ஏ தமிழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உலக தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை தரமணியில் இயங்கி வரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வி உதவித் தொகையுடன் ஐந்தாண்டு கால ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு ((Five Years Integrated Post Graduate M.A. Tamil) வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான பட்டத்தை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வழங்குகிறது.
இப்படிப்பில் வரும் கல்வி ஆண்டுக்கான (2025-2026) மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பிளஸ் 2 மாணவர்கள் சேரலாம். இதற்கான விண்ணப்ப படிவத்தையும் விளக்கவுரையையும் www.ulakaththamizh.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேரிலும் பெற்றுக்கொள்ளலாம். இந்த படிப்பில் சேரும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 பேருக்கு மாதம்தோறும் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இக்கல்வி நிறுவனத்தில் ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனி இலவச விடுதி வசதி உள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களுடன், இயக்குநர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், இரண்டாம் முதன்மைச் சாலை, மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம், தரமணி, சென்னை-600113" என்ற முகவரியில் ஜூன் 16-ம் தேதிக்குள் நேரில் அல்லது தபாலில் சமர்ப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்கள் அறிய 044 - 22542992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும் மாணவர் சேர்க்கை தொடர்பான முழு விவரங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்திலும் அறிந்து கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT