Published : 12 May 2025 05:50 AM
Last Updated : 12 May 2025 05:50 AM
சென்னை: கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யுஜிசி நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே 12) முடிவடைகிறது. நம் நாட்டில் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசின் உதவித் தொகை பெறவும், பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் ஜூன், டிசம்பர் என 2 முறை கணினி வழியில் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
அதன்படி, 2025 ஜூன் பருவத்துக்கான முதல்கட்ட நெட் தேர்வு ஜூன் 21 முதல் 30-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 16-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்றுடன் (மே 12) முடிவடைகிறது. விருப்பம் உள்ள பட்டதாரிகள் ugcnet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் செலுத்த நாளை (மே 13) கடைசி நாள். தொடர்ந்து, விண்ணப்பத்தில் மாணவர்கள் மே 14, 15-ம் தேதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்.
தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம், பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் தகவல்களை www.nta.ac.in எனும் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், 011-69227700 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT