Published : 09 May 2025 02:32 PM
Last Updated : 09 May 2025 02:32 PM

வேளாண் படிப்புகள் சேர்க்கை தொடக்கம்: ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8 கடைசி நாள்

சென்னை: தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவு இன்று (மே 9) தொடங்கியது. ஆன்லைனில் விண்ணப்பிக்க ஜூன் 8-ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் வரும் கல்வி ஆண்டில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 7-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அரசு உதவி பெறும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வழங்கப்படும் இளநிலை வேளாண்மை மற்றும் அது தொடர்புடைய படிப்புகளில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவை சென்னை தலைமைச் செயலகத்தில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று (மே 9) காலை தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: வேளாண்மை பல்கலைகக்கழகம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் வேளாண்மை தொடர்பான இளநிலை படிப்புகளுக்கு ஒருசேர மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. பிஎஸ்சி (ஆனர்ஸ்) விவசாயம், தோட்டக்கலை, வனவியல், பட்டுவளர்ப்பு, பிடெக் வேளாண் பொறியியல், பிடெக் உணவு தொழில்நுட்பம், பிடெக் உயிரி தொழில்நுட்பம், உயிரி தகவலியல் உள்பட பல்வேறு படிப்புகளில் மொத்தம் 6921 இடங்கள் பொது கலந்தாய்வு முறையில் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tnau.ucanapply.com என்ற இணையதளத்தை பயன்படுத்தி ஜூன் 8-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்ப கட்டணம் ரூ.600. எஸ்சி, எஸ்டி மாணவர்களாக இருந்தால் ரூ.300 மட்டும். மாணவர்களின் தரவரிசை பட்டியல் ஜூன் 16-ம் தேதி வெளியிடப்படும்.

அதைத்தொடர்ந்து, விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவை தேர்வு செய்வதற்கான இணையவழி கலந்தாய்வும் தொடங்கும். மொத்தமுள்ள இடங்களில் 7.5 சதவீத இடங்கள் அதாவது 403 இடங்கள் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதேபோல், பிளஸ் 2-வில் வேளாண் பிரிவு படித்த மாணவர்களுக்கு 223 இடங்களும், சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு 20 இடங்களும், மாற்றுத்திறனாளிகளுக்கு 128 இடங்களும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன,” என்று அமைச்சர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது வேளாண்துறை செயலர் மற்றும் வேளாண் உற்பத்தி ஆணையர் வி.தட்சிணாமூர்த்தி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் (பொறுப்பு) ஆர்.தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x