Published : 06 May 2025 03:09 PM
Last Updated : 06 May 2025 03:09 PM
சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாளைக்கு முன்பாகவே தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் மாதம் 3-ம் தேதி தொடங்கி 25-ம் தேதி முடிவடைந்தது. அந்தத் தேர்வை 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு முடிவடைந்த நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 4-ம் தேதி தொடங்கி 17-ம் தேதி நிறைவடைந்தது. விடைத்தாள் மதிப்பீட்டு பணியில் மாநிலம் முழுவதும் 46 ஆயிரம் முதுகலை பட்டதாரிகள் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். இதற்காக 83 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விடைத்தாள் மதிப்பீட்டு பணி முடிவடைந்ததும் மாணவர்களின் மதிப்பெண் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடந்த 2 வாரமாகவே பிளஸ் 2 தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகலாம் என்ற தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தது. இந்நிலையில், அந்த தகவலை உறுதிபடுத்தும் வகையில் பிளஸ் 2 தேர்வு முடிவு ஒரு நாளைக்கு முன்னதாக, அதாவது மே 8-ம் தேதியே வெளியிடப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று (மே 6) வெளியானது.
இது தொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரால் மே 8-ம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில் வெளியிடப்பட உளளது. மாணவர்கள் தேர்வு முடிவுகளை பின்வரும் இணையதள முகவரிகளில் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு அறிந்துகொள்ளலாம்.
https://results.digilocker.gov.in | www.tnresults.nic.in - தேர்வு முடிவுகளை பார்க்கும்போது தேர்வர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்ய வேண்டும். பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம். மேலும், அவர்கள் பள்ளியில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும் தனித்தேர்வர்களுக்கு அவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்தபோது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) வாயிலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT